ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி

பதிகங்கள்

Photo

ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறச் சத்தறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகுங் குரவனே.

English Meaning:
The Unholy Guru is Bereft of Knowledge

Fool is he,
A big fool is he;
The Way of Becoming he knows not;
A vile fellow that is not of passions rid,
To vile men he teaches things vile;
Bereft of knowledge,
He no teacher exalted is;
—The Guru unholy.
Tamil Meaning:
`தக்கது இன்னது; தகாதது இன்னது` என உணரும் உணர்வில்லாதவன் மூடன்` என்பது உலகம் அறிந்தது. ஆயினும், அவ்வாறு அவற்றை அறிந்தும் காமம் முதலிய குற்றங்களின் நீங்கி, நல்லவற்றைப் பற்றியொழுகும் நல்லொழுக்கம் இல்லாதவன் அறிவுடையவன் ஆயினும் அதிமூடன் ஆவான். இனிக்குற்றங்களின் நீங்கி வல்லவற்றையே கடைப்பிடித்தொழுகும் நல்லொழுக்கம் உடையனாயினும் நல்லனவற்றை மதித்து உவந்து ஏற்கும் பண்பின்றி அவற்றை உணர்த்துவோரையும் இகழ்கின்ற கீழ்மக்கட்கு நல்லுபதேசத்தைச் செய்வானாயின் அவனும் அறிவிலியேயாவான். ஆகையால் அத்தகையோனும் சற்குருவாகாது, அசற்குருவாயாவன்.
Special Remark:
கலதி - கீழ்மகன். ``ஆமாறு`` என்றதனானே அதன் மறுதலைப் பொருளும் போந்தது. நல்லன தீயனவற்றை அறிய மாட்டாதவன் மூடனாதல் இயல்பாகவே நன்கறியப்பட்டதாயினும், அவற்றை அறிந்தவனினும் அறிந்தவாற்றில் நிற்கமாட்டாதவன் அவனிலும் பெருமூடன் ஆதலை வலியுறுத்தி ஓதுதற் பொருட்டே இயல்பாக அறியப்பட்டதனை அனுவாதமாக எடுத்தோதினார்.
ஓதி யுணர்ந்தும், பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையிற் பேதையார் இல். -திருக்குறள், 834
என அருளினமை காண்க.
`கலதிகட்கு ஆமாறு அறிவிப்பின் அது பயன்படாது ஆகலின், அஃது அரும்பொருளை அழிவு செய்ததாம்` என்பதை,
``அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்``-திருக்குறள், 720
எனவும், `ஆகவே, அவ்வாறு அறிவிப்பவன் அறிவிலியாவான்` என்பதை,
``காணாதாற் காட்டுவான் தான்காணான்`` -திருக்குறள், 849 எனவும் அருளிச்செய்தார் திருவள்ளுவர். கோமான் - தலைவன். இங்கு, `தலைவன்` என்றது ஞானத்திற்குத் தலைவனாகிய சற்குருவை. ``அசத்தாகுங் குரவனே`` என்றது, `அசற்குருவே` என்றபடி. சற்குருவினின்றும் பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை.
இதனால், மேலது பிற சிலவற்றோடு ஒருங்கு வைத்து வலியுறுத்தப்பட்டது.