ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்

பதிகங்கள்

Photo

மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்(று)
ஆவி யெழுமள வன்றே உடல்உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகதி தானே.

English Meaning:
Rouse Kundalini and reach Supreme State

Rouse with the flaming Kundalini
And upward your Prana course;
Halting within the body
The acts of inhalation and exhalation
This, if you, through practice accomplish
You indeed have reached
The Supreme State Divine.
Tamil Meaning:
உயிரை உடம்பில் நிறுத்திச் செயற்பட்ச் செய்ய எழுந்த விருப்பத்தால் கீழ்நோக்கிக் கிடந்தும் மேல் நோக்கி எழுந்தும் விளங்குகின்ற குண்டலினி சத்தியோடு உயிர் பொருந்தி செயற்படும் வரையிலுமே உடல் நிலைபெற்றிருக்கும். அச்செயற்பாடு நின்றவுடன் உடல் நீங்கிவிடும். ஆகவே, உடல் உள்ளவரையும் உள்ளே விரும்பி ஈர்க்கப்படுவதும், வெளியே விடப்படுவதால் நீங்கிச் செல்வதும் ஆகிய மூச்சுக் காற்றினை அவ்வாற்றின் அடக்கி நடுநாடி வழியே செலுத்துமாற்றால் இதுகாறும் கூறிவந்த அண்ட லிங்கம் முதலிய அனைத்து இலிங்கங்களிலும் சிவனைப் பாவனை செய்து வழிபட்டால் மேலான கதி கிடைப்பதாகும்.
Special Remark:
குண்டலினி சத்தி ஒடுங்கிக் கீழ்நோக்கிக் கிடத்தலால் உயிருக்குக் கீழான உணர்வுகளும், அஃது எழுச்சியுற்று மேல்நோக்கி இயங்குதலால் உயிருக்கு மேலான உணர்வுகளும் உடல் வழியாக நிகழும். அவற்றுள் சிறந்தது மேலான உணர்வேயாதலால் அஃதொன்றையே நாயனார் குறித்தருளினஆர். குண்டலினி சத்தி பொதுவாக எல்லோரிடத்திலும் உடம்பினுள் கீழ்நோக்கிக் கிடந்து துயில்வதாகச் சொல்லப்படுதல், அதனால் உண்டாக்கப்படும் உலகியல் உணர்வு உணர்வாகாமை பற்றியேயாம். துயிலுதல், இறத்தல் அன்று ஆதலின் அந்நிலையிலும் அஃது உயிருக்கு ஓர் உணர்வைத் தந்துகொணஅடுதான் இருக்கும். அங்ஙனம் தருகின்ற அதனையும் அந்தச் சத்தி கைவிடும்பொழுது உயிர் உடம்பைச் செயற் படுத்த மாட்டாது. அதனால் உடல் விழுந்துவிடும். அதுவே, `இறப்பு` எனப்படுகின்றது. `அத்தகைய இறப்பு நேர்வதற்குள் உயிர் சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்றற்கு, ``பாவித்து அடக்கிற் பரகதிதானே`` என்றார்.
``அன்றே`` என்பது, `அந்நாள் வரையிலுமே` எனப்பொருள் தந்தது. ``உடல் உற`` என அனுவாதமாகக் கூறிய அதனால், `உடல் உறும்` என்பதை முதலில் உரைத்துக்கொள்க.
``பாவித்து அடக்கின்`` என்பதை, `அடக்கிப் பாவிக்கின்` என முன்பின்னாக மாற்றி உரைக்க. பாவித்தற்குச் செயப்படுபொருள் அதிகார முறைமையால் வந்தியைந்தது.
`இலிங்க வழிபாட்டினையும் பிராணாயாமம் செய்து செய்தல் சிறப்புடையது` என்றற்கு, ``மேவப்படுவதும், விட்டு நிகழ்வதும் அடக்கிப் பாவிக்கின்`` என்றார். ``விட்டு`` என்பது, `விடுதலால்` எனப் பொருள் தந்தது.
இதனால், `சிவனை இதுகாறும் கூறிவந்த அனைத்து இலிங்கங்களிலும் வைத்து யோக முயற்சியுடன் வழிபடுதலே வீடடைதற்கு வழியாகும்` என முடித்துக் கூறப்பட்டது.