ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்

பதிகங்கள்

Photo

குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வானிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறறி யேனே.

English Meaning:
Siva is Immanent and Transcendent

He pervades the roaring waters of the seas
He permeates the spreading winds and flaming fire
Thus is He immanent in all Nature
Yet I know Him not, adore Him not.
Tamil Meaning:
ஒலிக்கினஅற கடலை ஆடையாக உடைய நிலவட்டம், நீர், பல செயல்கட்கும் பயன்பட்டு நிற்கின்ற நெருப்பு, எங்கும் பரந்து செல்கின்ற காற்று, அனைத்தையும் தன்னுள் முறைப்பட அடக்கி நிற்கின்ற வானம் இவை அனைத்துமாய் அவற்றில் நிறைந்து நிற்கும் வகையில் உயர்ந்து சென்று, முடிவில் வானத்தையும் கடந்து உயர்ந்தோனாகிய சிவனை யான் உய்தி பெறுதற்கு, `ஒரு சிறு வடிவினனாகக் கண்டு வலம் வருதல் முதலிய வகையால் வழிபடுதல் எவ்வாறு` என அறிகின்றிலேன்.
Special Remark:
வருகின்ற திருமந்திரத்துள் அங்ஙனம் வழிபடுமாற்றை அருளுகின்றார் ஆகலின், இங்கு, ``ஆறு அறியேன்`` என யாதுமத் அறியார்போலக் கூறினாராயினும், கீழ் உரைக்கப் படுகின்ற அதுவன்றிப் பிறிதோர் ஆறு அறியேன்` என்பதே கருத்தாகும். செய்யுள் நோக்கித் தீயைக் காற்றுக்குப் பின்னர் வைத்தார். `குவலயமும், வானும்` என்னும் எண்ணும்மைகள் தொகுக்கப்பட்டன. `வாறிவை` என்பது பாடமன்று. பூதங்களைக் கீழத் தொடங்கிக் கூறினா ராதலின், `நீண்டு`` என்றார். `வரைந்து` எதுகை நோக்கி வலித்தல் பெற்றது. வரைதல், எல்லை வகுத்தல். `அகண்ட மானவனைக் கண்டனாக்குதல் இயலாது` என்பதாம். இதனை, ``அசிந்தினாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு`` (சிவஞான போதம் - சூ. 12. கருத்துரை.)என்றார் மெய்கண்ட தேவர்.
இதனால் இலிங்கத்தாலன்றி இறைவனை அணுகலாகாமை உணர்த்தப்பட்டது.