ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்

பதிகங்கள்

Photo

வரைத்து வலஞ்செயு மாறிங்கொன் றுண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்தெங்கும் போகான் புரிசடை யானே.

English Meaning:
Only Way of Knowing Siva is Worship

There is but one way here
Of knowing Him and adoring Him
They who with water and flower chant His name
They shall know Him
And from them He of the matted lock
Separates not.
Tamil Meaning:
மேற்கூறியவாறு நீண்டகன்று வரம்பிலனாகிய சிவனை வரம்புட்படுத்து வழிபடும் வழி ஒன்று இந்நிலவுலகில் உண்டு. அஃது யாதெனின், அலைகளை வரிசையாக்கி அதனாலே கரையை அடைகின்ற கங்கையாற்றின் நீரையும், பூக்களையும் கையிலே கொண்டு, அவனது பெயர்கள் பலவற்றையும் சொல்லி ஆட்டியும், சாத்தியும் வழிபட்டு அவனை அங்ஙனம் வழிபடப்பட்ட அவ்வடிவத்தில் வைத்து உணர்தலேயாகும். அங்ஙனம் உணரவல்லார் உளராயின் அவ்வடிவைப் பொள்ளல் செய்து அதனை விட்டு அவன் வேறு எங்கும் போய்விட மாட்டான்.
Special Remark:
`அதனுள் தானே இருந்து அருள் செய்வான்` என்பதாம். `இவ்வாறு அவன் தான் அருளிச் செய்த ஆகமங்களில் உரைத்துள்ளான்` என்பது கருத்து.
``தாபர சங்க மங்கள் எனும்இரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொன்டு மன்னுயிர்க் கருளை வைப்பான்`` *
என்றதும் இக்கருத்தினாலேயாகும்.
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை என உரைத் தருள`` *
என்று அருளிச் செய்தமை காண்க. `இஃதொழிய உயிர்கள் அவனை வழிபட்டு உய்யுமாறு வேறில்லையாதலின். அவற்றை இவ்வாற்றால் உய்வித்தல் வேண்டும் - என்னும் கருணை மிகுதியாலே அகண்டித னாகிய சிவன் இவ்வாறு கண்டிதனாய் நின்று அருள் புரிகின்றான்` என்னும் உண்மையைத் தெளிந்து கடைப்பிடிக்க - என்பதாம்.
``இங்கு`` என்றதனால், `இம்முறையைச் சிவன் நிலவுலகிலே தான் வைத்துள்ளான்` என்பது போந்தது.
இதனால், `அசிந்திதனாகிய இறைவனைச் சிந்தித்தனாகக் கண்டு வழிபடும் ஒரே முறையாவது இது` என்பது கூறப்பட்டது.