ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்

பதிகங்கள்

Photo

ஒன்றெனக் கண்டேன்எம் ஈசன் ஒருவனை
நன்றென் றடியிணை நான்அவ னைத்தொழ
வென்றைம் புலனும் மிகக்கிடந் தின்புற
அன்றென் றருள்செயும் ஆதிப் பிரானே.

English Meaning:
Worship Him as the One Being

As the One and Only Being
I saw the Lord,
And full well I adored His Holy Feet
Subduing my senses five;
And He His blessings granted,
The gracious One, the Lord Primal.
Tamil Meaning:
`சிவபிரான் ஒருவனே ஒப்பற்ற தனிமுதற் பொருள்` என நான் உணர்ந்தேன். அதனால் `அவனை மேற்கூறியவாற்றால் `வழிபடுதல் ஒன்றே நன்னெறி` என உணர்ந்து வழிபடுந்தோறும் வழி படுந்தோறும் அவன் தனது பேரின்ப வெள்ளம் எனது ஐம்புலன்களில் அடங்காததாய் மிக்கெழுந்து என்பால் விளையப் பண்ணுதலை அப்பொழுது அப்பொழுதே செய்கின்றான்.
Special Remark:
``எம் ஈசன்`` என்றது `சிவபிரான்` என்றவாறு. `ஒருவனையே` என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று. `அடியிணை தொழுதல்` என்பது `வழிபடுதல்` என்னும் பொருளதாய் ஒரு சொல் நீர்மைப்பட்டு ``அவனை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. ஆதலின், `அவனை நான் அடியிணை தொழ` என மொழி மாற்றி யுரைக்க. வெல்லுதல், கிடத்தல், உறுதல் என்னும் தொழில்கட்கு இன்பமே வினைமுதல் என்க. `என்பால் உற அருள் செய்யும்` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `சிவனைப் பொது நீக்கி உணர்ந்து இலிங்கத்தில் கண்டு வழிபடல் வேண்டும்` என்பதும், அங்ஙனம் வழிபடுதலால் விளையும் பயன் இது என்பதும் கூறப்பட்டன.