ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்

பதிகங்கள்

Photo

வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருந்த நினைவறி யாரே.

English Meaning:
Be of Love and See the Lord

What avails it
That you read holy scriptures,
Perform Pujas,
Gather flowers in cluster?
As long as you heart is like a pebble
Dropped into a dark pool
Over-spread with moss of ignorance,
You can never realize the Lord;
Lord that is in your heart`s love;
Lord that is blue-throated;
He, the Pure Light.
Tamil Meaning:
சிவபெருமானது புகழைக் கூறும் நூல்களை ஓதுதல், இயன்ற வகையில் சிவனை வழிபடுதல், மலர் கொய்து கொடுத்தல் முதலிய தொண்டுகளைச் செய்தல் என்னும் இவை போல்வனவற்றைச் செய்யினும், கல் வந்து விழப்பட்ட பாசிக் குளம் அக் கல்வீழ்ச்சியின் வேகம் உள்ள துணையும் பாசி நீங்கி நின்று, பின் பாசியுடையதாய் விடுதல் போல, மனத்தின் இயல்பை ஆராயுமிடத்து அத் தொண்டு களில் ஈடுபடும் துணையும் அஃது ஐம்புல ஆசையின் நீங்கி நின்று, பின் அதனை உடைத்தாய்விடும். அப்பொழுது மக்கள் சிவன்பால் அன்பு கொண்டிருக்கும் நிலை இல்லாதவராவர்.
Special Remark:
`ஆதலின், புறத்தொண்டு இல்லாதபொழுதும், செபம், தியானம் என்ற இவற்றை யுடையராதல் யாவர்க்கும் நன்று` என்பது குறிப்பெச்சம். ``பாசிக் குளத்தில் வீழ் கல்லாம் மனம்`` என்றா ராயினும், `கல்வீழ் பாசிக் குளமாம் மனம்` என மாற்றியுரைத்தல் கருத்தென்க.
``பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கி அது விடும்பொழுதிற் பரக்கும்`` 1
என்றார் சிவஞான சித்தியிலும். இரண்டாம் அடி யிறுதியில் `அவ்விடத்து` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இம்மந்திரம் பின்வருமாறும் ஓதப்படுகின்றது:-
``வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசக் கிணற்றினில் வீழ்கின்ற பாவிகாள்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருக்க நினைவறி யீரே.``
இது கொள்ளப்படுமாயின், இரண்டாம் அடியை முதல் அடியாகக் கொண்டு ஓதிக் கொள்ளுதல் நன்று.
இதனால், `சிவனை எஞ்ஞான்றும் மறவாதிருக்க முயலல் வேண்டும்` என்பது, இறுதிக்கண், நான்குமார்க்கத்திற்கும் பொதுமை யாக வைத்துக் கூறப்பட்டது.