ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்

பதிகங்கள்

Photo

எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

English Meaning:
Ways of Dasamarga

Gently light the lamp,
Gather flowers fragrant,
Humbly smear the ground with the holy paste,
Softly sweep,
Sing the Lord`s Praise,
Count the crystal beads,
Anoint in many ways,
And perform the diverse acts of temple service.
Tamil Meaning:
திருக்கோயிலில் விளக்கிடுதல், மலர்களைக் கொய்து கொடுத்தல், தொடுத்துக் கொடுத்தல், அலகிடல் மெழுகல், துதி பாடல், ஊர்தி சுமத்தல், பலவகைத் திருமஞ்சனப் பொருள்களைக் கொணர்ந்து கொடுத்தல் முதலிய எளிய பணிகளைச் செய்தல், தாச மார்க்கம், தொண்டர் நெறியாகும்.
Special Remark:
``எளியன`` என்பதை ஈற்றடியின் முதலிற் கூட்டி உரைக்க. எளிமையாவது, மன ஒருக்கம், பொறியடக்கம் முதலியன செய்ய வேண்டாமை. தளி - கோயில். இதனைக் குறிக்கும் ``அது`` என்னும் சுட்டுப்பெயர் செய்யுளில் முன் வந்தது. தூர்த்தல் - குப்பைகளைப் போக்கல்; அஃதாவது அலகிடல். பள்ளி - இருக்கை. சிவிகை முதலிய ஊர்திகள்; இஃது இடைக் குறைந்து நின்றது. அதற் குரிய பணியாவது சுமத்தல். `தளித்தொழில்` என்பதில் தகரவொற்றுத் தொகுத்தல் பெற்றது. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட நின்று, `புறத்தொழில் மாத்திரையால் சேய்மையில் நின்று செய்தலால் சரியை தாச மார்க்கமாயிற்று` என்பது விளக்கி நின்றது.
இதனால், `சரியைத் தொண்டாவன இவை` என விளக்கும் முகத்தால், சரியை தாசமார்க்கமாதல் கூறப்பட்டது.