ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்

பதிகங்கள்

Photo

அதுவிது ஆதிப் பரமென் றகல்வர்
இதுவழி சென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுவிதி நெஞ்சில் அளிக்கின்ற வாறே

English Meaning:
Hold Fast to Chariya Path

This the Primal Being, that the Primal Being
Thus in doubt tossed.
Away they moved farther and farther from It.
They know not this is the true Path.
And worship not;
Do pursue this appointed way,
And seek the King of Kings;
That, in truth, shall quell
All doubts within you swell.
Tamil Meaning:
`அந்தத் தெய்வம் முதற்கடவுள், இந்தத் தெய்வம் முதற்கடவுள்` என்று பலவான எண்ணங்களைக் கொண்டு பலர் சிவனை அடையாது நீங்குவர். அதனால், `சிவனை அடைவதே உய்யும் நெறி` என்று தெரிந்து, அவனை வணங்குவார் அரியர். `எல்லாத் தேவர்க்கும் தலைவன் சிவபெருமான்` என்பது வேதாகமங் களை உணரின் தெளிவாம். ஆதலால், அம்முறையே சென்று அவனையே விரும்பி அடையுங்கள். அவ்வாறு அடையும் முறையே மக்கள் உள்ளத்தில் பொருந்தி நிற்கும்படி ஆன்றோர் உணர்த்துகின்ற நெறியாகும்.
Special Remark:
``வேந்தனை`` என்பது பின்னர் வருதலால், வாளா, ``இறைஞ்சினரில்லை`` என்றார். ``வேந்தன்`` என்று, முன் `அது, இது` எனச்சுட்டிய தெய்வங்கட்கு வேந்தனை என்றவாறு. ``விதி`` என்றது, சிறப்புப்பற்றி வேதாகம விதியையே குறித்தது. `அதன் வழியே சென்று நாடும்` என்றதனால், அது சிவனே வேந்தனாதலை இனிது விளக்கி நிற்றல் பெறப்பட்டது. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், `சிவனுக்குரிய தொண்டுகளைச் செய்தலே, தொண்டர் நெறி` என்பது ஆன்றோர் துணிபாதலை விளக்கும் முகத்தால், சரியையே தாசமார்க்கமாதல் கூறப்பட்டது.