ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்

பதிகங்கள்

Photo

அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து
அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடத்தே.

English Meaning:
Days Appropriate for Bhairava Chakra Worship

Ten days in the fortnight
Do this Worship perform;
The first six days of the fortnight,
And then the eighth, tenth, twelfth and fourteenth
These the ten days appropriate
(Leave out seventh, ninth, eleventh and thirteenth)
Then coursing breath through Right Nostril
Do you worship.
Tamil Meaning:
முற்பக்கம் (பூர்வ பக்கம்) பிற்பக்கம் (அபர பக்கம்) என்னும் இருபக்கங்களில் உள்ள பதினைந்து திதிகளையும் அவ்ஆறு திதிகளாகப் பிரிக்கும் முறையில் சக்கரத்தை அமைத்து, உவாக்களோடு கூடப் பதினாறு திதிகட்கும் பதினாறு உயிரெழுத்துக்களில் அகாரத்தைக் கடையுவாவிற்கும், (அமாவாசைக்கும்) பதினாறாவது உயிரெழுத்தைத் தலையுவாவிற்கும் (பௌர்ணிமைக்கும்) உரியவாக வைத்து, ஏனையவற்றை ஆகாரம் முதலாக நேர்முறையில் முற்பக்க பிரதமை முதலியவற்றிற்கு உரியவாக எண்ணியும், பதினைந்தாம் உயிர் முதலாக எதிர்முறையில் பிற்பக்கப் பிரதமை முதலியவற்றிற்கு உரியவாகவும் கொண்டு, முதல் அறை ஒன்றில் மட்டும் அகாரத்தை யும், அடுத்து உள்ள அறைகளில் முறையே வலமாக ஆகாரம் முதல் பதினைந்தாம் உயிர்முடிய ஓர் எழுத்தை இவ்விரண்டு அறைகளிலும், பதினாறாம் உயிரெழுத்தை மட்டும் ஓர் அறையிலும் அடைக்க, (14X2) இருபத்தெட்டும், இரண்டும் ஆக முப்பது அறைகள் நிரம்ப, ஆறு அறைகள் நடுவில் வெற்றிடங்களாய் நிற்கும். அவற்றிற்கு நடுவில் `ஓம் பம்` என்னும் பிரணவ பீசங்களையும், அவற்றின் கீழ்த் தொடங்கி, `பைரவாய நம` என்னும் ஆறெழுத்துக்களை ஆறு அறைகளிலும் எழுதச்சக்கரம் நிரம்பியதாம். இரண்டிரண்டாய் உள்ள ஆகாரம் முதலியவற்றை அமாவாசை தொடங்கி அகரத்தை அடுத்த ஆகாரம் முதலியவற்றை ஒன்றுவிட்டு ஒன்றான அறைகளில் நேரே முற்பக்கப்பிரதமை முதலியவாக ஓர் எழுத்தைப்பத்துருச் செபித்துப் பௌர்ணிமை முடிவில் நடுவில் உள்ள பிரணவ பீசங்களோடு மூலமந்திரத்தைப் பத்துருச்செபித்து அமாவாசை முதல் பௌர்ணிமை முடிய ஒவ்வொரு நாளும் இவ்வாறு வழிபாடு செய்தல் வேண்டும். பின்பு பௌர்ணிமை தொடங்கிப் பிற்பக்கப் பிரதமை முதல் ஒவ்வொருநாளும் பதினைந்தாம் உயிர் முதலாக எதிர் முறையில் அவ்வாறே ஒன்றுவிட்டொன்றாக ஒவ்வோர் எழுத்தையும் பத்துருச் செபித்து, முடிவில் மேற்கூறியவாறு நடுவில் உள்ள மந்திரத்தைச் செபித்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபடும் நாளில் அன்றைய திதிக்குரிய எழுத்து முதலாகத் தொடங்கி அதற்கு முன்னுள்ள எழுத்தில் வந்து முடியவே செபித்தல் வேண்டும். எழுத்துக்களை முதலில் பிரணவத்தையும், ஈற்றில் மகாரத்தையும் கூட்டி உச்சரித்தலேமுறை. பதினைந்தாம் உயிரைமட்டும் ஹகாரத்தின் மேல் ஏற்றி `ஹம்` எனக்கூறல் வேண்டும். அகாரம் ஒழிந்த பிற உயிர்களையும் ஹகாரத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் வடமொழி வழக்கு.
Special Remark:
வயிரவர் எந்நாளும் பாதுகாப்பவராதல் பற்றி, ``கால பைரவர்`` எனப்படுதலின், கதிரளவை, (சௌரமானம்) மதியளவை (சாந்திரமானம்) இரண்டிற்கும் பொதுவான திதிக்காலத்தை ஒட்டி வழிபடுதல் வேண்டும் என்பது இம் முறையால் அறிந்து கொள்ளப் படும். ``வலமாக`` என்றாரேனும் அது முற்பக்கத்தில் என்பது எழுத்து முறையாற் பெறப்படுதலின், பிற்பக்கத்தில் எதிர் முறையால் இடமாகச் செல்ல வேண்டும் என்பது உணர்ந்து கொள்ளப்படும். நடுவில் பிரணவம், பீசம், மூலமந்திரம் இவற்றை எழுதுதல் பொது முறையானே கொள்ளப்படும். `நடவே` என்பது பாடம் அன்று. இங்ஙனம் கூறப்பட்ட இச்சக்கர அமைப்பினைக் காண்க.
மேல் வை குற்ற - பின்னர்ப் பொருந்தியுள்ள எழுத்துக்கள். இவற்றை `சத்தமி முதலாக` என்றமையின், ஒரு வரிசையில் ஆறு எழுத்துக்கள் உள்ளமை விளங்கும்.
இதனால், வயிரவச் சக்கரத்தின் அமைப்புக் கூறப்பட்டது.