ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 9. சமாதி

பதிகங்கள்

Photo

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே. 

English Meaning:
Tranquillity in Samadhi

Samadhi attained, Siva is attained;
Sakti too will be caught in its fold;
Distracting passions will be dispelled;
In equanimity perfect,
Like unto a balance
Will be the mind
All this, for those who in Samadhi sleep.
Tamil Meaning:
துலை நாப்போல உள்ள ஆஞ்ஞையில் அசை வற்றிருக்க வல்லவர்க்கு, மெய்ப்பொருளைத் தலைப்பட்டிருக்குமாறு, அது, தானே கிடைக்கும். ஆணவமாகிய வலையில் தானே சென்று நின்று, அந்நிலை காரணமாகச் சினங்கொண்டவள்போல இருந்த அருட் சத்தியும் சினந்தணிந்து, பிறவிக் கடலுக்குக் கரையாகி நிற்பாள்.
Special Remark:
தத்துவம் - மெய்ப்பொருள். அருட் சத்தியே பாசத்தின் வழி நின்று அதனை நடத்துங்கால் ``திரோதான சத்தி`` எனப்படுதலும், அது, ``சின மருவு திரோதாயி`` (சிவப்பிரகாசம், 48) எனக் கூறப்படுதலும் காண்க. குலை - கரை. குலைப்பட்டு - கரையின் தன்மை எய்தி. ``கோபம் அகலும்`` என்பதை, குலைப்பட்டிருத்தற்கு முன்னே கூட்டிப் பொருள் கொள்க. திரோதான சத்தி, சினந்தணிந்து அருட் சத்தியாய் ஆன்மாவிற் பதிதலே சத்தி நிபாதம் என்பது அறிக. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல்.
இதனால், சிவயோகத்தின் முடிவு நிலையாகிய சிவ சமாதியால் சத்திநிபாதம் முதிர்தல் கூறப்பட்டது. அது கூறவே, ``தத்துவம் கூடும்`` என்றது, ஞானத்தைப் பெறும் பக்குவம் எய்தலைக் குறித்ததாயிற்று.