ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 9. சமாதி

பதிகங்கள்

Photo

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருட்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே. 

English Meaning:
Vision of Light Resplendent in Samadhi

When in the Meru Peak of Sahasrara
Bindu and Nada flourish
In their union will Samadhi be;
And the Light Resplendent of Endless Jnana
Will then visioned be!
Tamil Meaning:
கருவிற்கு வித்தாய வெண்பாலும் (சுக்கிலமும்) குண்டலி சத்தியும் ஆஞ்ஞைத் தானத்தில் சோர்வின்றி நிற்குமாயின், அவ்விடத்தில் ஆன்மா சமாதியைத் தலைப்படும். அத்தலைப்பாட்டில் ஏகதேச உணர்வு நீங்கிய வியாபக உணர்வு தோன்ற, அதன்கண் அடைதற்கரிய பொருளாகிய அழகிய சிவம் விளங்கும்.
Special Remark:
வெண்பால் (சுக்கிலம்) சோராமை, ஆன்மா புறப் பொருளையும், தன்னையும் மறந்து தியானப் பொருளோடு ஒன்றுதலாம். குண்டலியாவது ``வாக்கு`` என்பதை மேலே குறித்தாம். அதுவும் மேற்குறித்த இரு பொருளையும் பற்றாது நிற்றலை, ``ஆஞ்ஞையில் நிற்றல்`` என்றார். இதனை நாவுக்கரசர் அரம்பையர் ஆடல் பாடலைக் கண்டு அகம் இளையாதிருந்த ஞானநிலையோடு ஒப்பிட்டு உணர்க. இவ்விரண்டும் உயிர், சமாதிநிலை கூடினமைக்கு அறிகுறி என்றவாறாயிற்று. ஆகவே, தியான நிலையில் இவ்விரண்டும் இந்நிலையினின்றும் சோர்தல் உண்டு என்பது பெறப்பட்டது. ``விந்து, நாதம்`` என்பவற்றிற்கு இங்குப் பிறவாறு உரைத்தல் ஏலாமை அறிக. சுழுமுனையாகிய நடுநாடியின் உச்சியாகிய புருவ நடுவை, ``மேரு`` என்றல் வழக்கு என்பது மேலேயும் கூறப்பட்டது. பின்னிரண்டடிகள் சமாதியில் சிவ நிலை அனுபவமாய் விளங்குதல் கூறப்பட்டது. தியான நிலையில் பாவனை மாத்திரமே உளதாம் என்க.
இதனால், சமாதி நிலையில் விளைவன கூறப்பட்டன.