ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 9. சமாதி

பதிகங்கள்

Photo

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

English Meaning:
Vision Lord`s Dance in Samadhi

Five the Mystic Regions,
Eight the Mountain Ranges,
Six the Adharas that hold them;
With thought centred on Him
They well see Him there stand;
Partaking of the Grace of His all-pervading Feet
They shall immortal be.
Tamil Meaning:
நாடு சுற்றும் ஒருவன் அங்ஙனம் சுற்றி வரும் நாடுகள் ஐந்து; அவற்றில் உள்ள மலைகள் பன்னிரண்டு; அங்கு வாழும் குடிகள் நாற்பத்தெட்டு வகையினர். அவைகளை எல்லாம் முழுதும் காணவேண்டும் என்று விரும்பிய அவனது மனம் இடையே ஒரு பெரு வெள்ளத்தைக் கண்டு அதில் அழுந்திவிட, அவன் அதனையே குடித்தும், அதனுள்ளே மூழ்கியும் இன்புற்றிருக்கின்றான்.
Special Remark:
மண்டலம் ஐந்து, பஞ்சபூதங்களின் எல்லைகள், வரைகள் பன்னிரண்டு, பிரணவ கலைகள். குடிகள் நாற்பத்தெட்டு, அக்கரங்கள் (ஐம்பதில் க்ஷகாரம், ளகாரம் என்னும் இரண்டும் ஒழித்து ஏனையவை. அடிநிலை எழுத்தாகிய அகரமும் இங்குக் குறிக்கப்பட வில்லை, அது சிவமாதல் பற்றி) இவை மூலாதாரம் முதல் விசுத்தி வரையில் உள்ள ஐந்து ஆதாரங்களிலும் மேலே காட்டப்பட்டவாறு நிற்றலின் ``குடிகள்`` என்றார். `இவற்றைக் கண்டிட விரும்பும் கருத்து` என்க. அஃதாவது, இவற்றையே நோக்கி நிற்கும் எண்ணம். ``நிலா விடும்`` என்ற செய்யுமென்முற்று ஆண்பாலில் வந்தது. இதற்கு, `சமாதி எய்தினோன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``ஓடும்`` என்னும் அடைமொழியால் `பதம்` வெள்ள நீரைக் குறித்தது. வெள்ளம், சிவானந்தம்.
இதனால், சமாதிநிலை எய்தினோர் பிறவற்றை எய்த விரும்பாமை கூறப்பட்டது.