ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 9. சமாதி

பதிகங்கள்

Photo

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே. 

English Meaning:
In Samadhi Mano-Laya is Reached

Where there is mind absorption,
There life`s breath is;
Where there is no mind absorption,
There life none is;
They who, in rapture, sit in mind absorption
Are verily fixed in Yoga of absorption.
Tamil Meaning:
புறப் பொருளிடத்தும், ஆன்மாவிடத்தும் நிற்கின்ற மனம் எப்பொழுது உண்டோ, அப்பொழுதெல்லாம் பிராண வாயுவின் இயக்கமும் உளதாகும்; அத்தன்மையான மனம் இல்லாத பொழுது, பிராணவாயுவின் இயக்கமும் இல்லையாம். மேற்கூறிய இரண்டையும் விடுத்து தேயப்பொருளில் (தியானிக்கப்படும் பொருளில்) நிலை பெற்ற மனத்தால் அல்லல் அற்று இன்புற்றிருப் பவர்க்கு, அத்தேயப் பொருளிடத்தே அவரது மனம் ஒடுங்கி நிற்கும்.
Special Remark:
``மன் மனம்`` நான்கில் முதலன மூன்றும் வினைத் தொகை. மன்னும் இடங்கள் ஏற்ற பெற்றியாற் கொள்ளப்பட்டன. இறுதியது, `தலைமைப் பொருளது மனம்` என ஆறாவதன் தொகை. `மனம் மனத்தில் ஒடுங்கும்` என்னும் நயம் தோன்ற ``மன் மனத்துள்ளே மனோலயம் ஆம்`` என்றாரேனும், `மன்னுள்ளே` என்பதே கருத்தாம். மூன்றாம் அடியில், `மனத்தால்` என மூன்றாவது விரிக்க. `மனோலயம் உளதாம்` என்பதே சொற்பொருளாயினும், கருத்து நோக்கி மேற்கூறியவாறு உரைக்கப்பட்டது.
இதனால், `சமாதி நிலையில் உயிர்ப்புத் தானே அடங்கி நிற்கும்` என அந்நிலையில் உளதாகின்ற மற்றொன்று கூறப்பட்டது. இதற்குக் கீழ்ப்பட்ட நிலைகளில் உயிர்ப்பை யோகியர் தமது முயற்சியால் அடக்குவர். இவற்றை, தியான யோக துரியமும், சமாதி யோக துரியாதீதமுமாதல் பற்றி அறிந்து கொள்க.