ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை

பதிகங்கள்

Photo

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே. 

English Meaning:
One who throws away the precious gem in hand,
And carries a heavy stone instead;
Or One who parts with milk, curd and ghee on hand
And prefers the bitter poison, fatal-
Like him is the one who follows the path of Karma
As compared to Jnana.
Tamil Meaning:
கன்மி ஞானிக்கு ஒப்பாதல் - அஃதாவது, ஞானிக்கு ஒப்பாகக் கருதி, ஞானகுரு இருக்கவும் அவனை விடுத்துக் கன்மியைக் குருவாகக் கொள்ளுதல், கையில் மாணிக்கம் கிடைத்திருக்கவும் அதனை எறிந்துவிட்டு, வெயிலால் வெதும்பிக் கிடக்கும் பரற்கல்லைக் கையில் எடுத்துச் சுமப்பவன் செயல்போலவும், கையில் நெய்யுள்ள பாலும், இளநீரும், தயிரும் இருக்க அவற்றை உண்ணாமல், பின்புதான் அழிதற்கு ஏதுவாகிய எட்டிப்பழத்தை முயன்று பெற்று உண்பவன் செயல் போலவும் ஆம்.
Special Remark:
ஒப்பு - ஒத்தல். இஃது ஒப்பாகக் கருதிச் செய்யும் செயலின் மேல் நின்றது. கன்மி - `கன்மமே முத்தி தரும்; ஞானம் வேண்டுவதில்லை` என்பவன். இக்கொள்கையினரை, `கன்ம காண்டிகள்` என்பர். கன்மி ஞானிக்கு ஒத்தல், சுமப்பான் விதி போன்றும், கைப்பு இட்டு உண்பான் (செயல்) போன்றும் ஆம் என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், உண்மைக் குரவரது பெருமையை அறியாமையும் குற்றமாதல் கூறப்பட்டது.