ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை

பதிகங்கள்

Photo

கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

English Meaning:
The black guna enters the body as Tamas,
The red guna enters the body as Rajas,
The white guna enters the body as Sattva,
Real bathing in the holy waters is the
Purification of these three gunas by the grace of the Lord.
Tamil Meaning:
நீர்தான், `நிலம், காற்று` என்பவற்றில் கலப்பினும் அது அதுவாம் இயல்புடையது. ஆதலின், அஃது எவ்வுடம்பிற் கலந்ததாயினும் அவ்வுடம்பின் தன்மைக்கு ஏற்பக் கறுத்தும், சிவத்தும், வெளுத்தும் நிற்பதாம்.
Special Remark:
`அதனால், சிவஞானமின்றி வாளா தீர்த்தத்தில் மூழ்கு வோர்க்கு அவரவர்க்கு உள்ள குணமே பின்னும் மிகுந்து நிற்கும்` என்றவாறு. நான்கிடத்தும், ``கலந்தது`` என்றதன்பின், `ஆயின்` என்பன சொல்லெச்சமாய் நின்றன. ``கலந்ததேல்`` என்றே பாடம் ஓதுதலும் ஆம். ஈற்றடி நீரின் தன்மையைக் கூறிற்று; நீர் காற்றாதல் ஆவியாய்க் கலந்தபொழுதாம். ஈற்றடியை முதலில் வைத்து, ``நிலம், காற்று`` என்றவற்றிலும் ``உடம்பில்`` என்பனபோல இல்லுருபு விரிக்க. ``நீரது`` நான்கிலும் அது, பகுதிப்பொருள் விகுதிகள். கறுத்தல் முதலிய மூன்றும் தாமத இராசத சாத்துவிக குணங்களை மிகுவித்தலைக் குறித்த குறிப்பு மொழிகள். `கலந்ததன் இயல்பாகும்` என்றதனால், ``உடம்பு`` என வாளா கூறினாரேனும், கறுத்தல் முதலிய மூன்றிலும், `அவ்வக் குணமுடைய உடம்பு` என்பது கொள்ளப்படும்.
இதனால், `தீர்த்தம் தெய்வ நீராதல், உள்ளத்துணர்வாலன்றி இல்லை` என்பது கூறப்பட்டது. அப்பரும், நீராண்ட புரோதாயம் ஆடுங்காலத்து, `மாதேவா மாதேவா என்று வாழ்த்தி ஆடப் பெற்றோம்` (தி.6 ப.93 பா.3) என்று அருளிச்செய்தமை அறியற்பாற்று.