ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை

பதிகங்கள்

Photo

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே. 

English Meaning:
To them who love Him dear,
The Lord will appear delicious cool;
To them steeped in worldly pleasures,
He will appear never;
To Yogis who breath control;
But sure does He
In thoughts abide,
Of Jnanis, who doubt-free see.
Tamil Meaning:
தெளிந்த ஞானிகளது உள்ளத்தில் வீற்றிருப் பவனாகிய சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிக்கத் தெரிந் தவர்க்குக் குளிர்ச்சி உடையனாய் விளங்குவான். யோக நெறியில் மூச்சை அடக்க அறிந்தவர்க்கும் அவன் ஒருகால் விளங்குதல் கூடும். ஆயினும், ஞானம், அன்பு, யோகம் என்ற இவற்றுள் ஒன்றும் இன்றித் தீர்த்தத்திலே மட்டும் சென்று முழுகத் தெரிந்தவர்க்கு அவன் அடைதற்கு அரியன்.
Special Remark:
நான்கு, இரண்டாம் அடிகளை ஒன்று நான்காம் அடிகளாக வைத்து உரைக்க. தளி - நீர்த்துளி. ``தண்ணிது`` என்பது பண்புப்பெயராய் நின்றது. குளி - குளித்தல், முதனிலைத் தொழிற் பெயர். ``கூடவும்`` என்ற உம்மை, சிறப்பு. தியான சமாதிகளிற் செல்லாது இயம நியம பிராணாயாமங்களில் நிற்பவர்க்கு எளிதன்மை கூறுவார், ``வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்`` என்றார்.
இதனால், ஞானமாகிய அன்பும் இல்லாதவர் தீர்த்ததில் சென்று முழுகின் பயன் இல்லை என்பது கூறப்பட்டது.