ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை

பதிகங்கள்

Photo

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்க வருபுனற் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே. 

English Meaning:
They who adore Him, Reach His heavenly abode;
Thus it is,
Immortals know Primal Lord;
Bathe in pellucid waters of Sacred Ganga
That from Lord`s crest here descends;
You shall holy become,
Saved of impurities sinful.
Tamil Meaning:
சிவபெருமானை அறிவால் அறிகின்றவரே அமரர் (இறப்பும், பிறப்பும் இல்லாதவர்) ஆவர். அவரே சிவலோகத்தில் சென்று வீறு பெற்று வாழ்ந்து, பின் மீளாநிலையைப் பெறுவர். ஆகவே, சிலர் அவனை அங்ஙனம் அறிவால் அறிதலைச் செய்யாமலே, தன்னிடத்து மூழ்குவாரை ஈர்த்துச் செல்ல வருகின்ற கங்கையாற்றில் மரக்கலம் செல்லத்தக்கவாறு ஆழ்ந்தும் அகன்றும் ஓடும் நீரில் முழுகிய துணையானே அறிவராய் விடுவரோ!
Special Remark:
`ஆதிப்பிரானை அறிவார்` என முன்னே கூட்டுக. செறிவான் - எங்கும் செறிந்தான்; (தி.8 திருவம்மானை, 13) சிவன். அவன் உறைபதம், சிவலோகம். `திருக்கோயில்கள்` என்பாரும் உளர். அவற்றிற்கு இங்கு இயைபின்மை அறிக. வலம் - வெற்றி; வீறு. ``கொள்`` என்னும் முதனிலை, `கொண்டு` என எச்சப்பொருள் தந்தது. ``மறியார்`` என்பதைப் பெயராக்கி, `வலங்கொள் மறியார்` என வினைத்தொகை யாக்கலுமாம். வளைத்தல் - ஈர்த்து ஆழ்த்தல். `வளைக்கைக் கங்கை` எனப்பாடம் ஓதி, உமையம்மையது கைவிரல்களினின்றும் கங்கை தோன்றிய புராண வரலாற்றை அதற்குப் பொருளாக உரைப்பாரும், பிற கூறுவாருமாவார். பொறி - எந்திரம். காற்றால் இயங்குதலின், பாய்மரக் கப்பலையே அக்காலத்தார் எந்திரமாகக் கருதினர். ``புண்ணியர்`` என்றது, `ஞானியர்` என்னும் பொருளது.
இதனால், தீர்த்தங்களில் மூழ்குவார் மேற்கூறியவாறு தெளியறிவினராதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. சரியை முதலியன இறைவனை அறிவால் அறியும் முறையேயாதல் அறிக.