ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 13. நல்குரவு

பதிகங்கள்

Photo

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே. 

English Meaning:
Light Wisdom`s Lamp in Good Time
Our kith and kin, unrelenting, more than Karma stern,
Unrelaxing us pursue; so, ere life from body goes,
In good time, light thou Wisdom`s lamp,
And intent thus, to that new-lit track, keep close.
Tamil Meaning:
புதிய வினைகள் பலவற்றைச் செய்யத் தூண்டுதலால், `ஒருவரைப் பற்றி மற்றொருவர், அவரைப் பற்றி வேறொருவர்` என்று இவ்வாறு தொடர்ந்துவரும் சுற்றத்தார் பழ வினையினும் பார்க்கக் கொடியோரே. அதனால், அவரைப் புறந் தருதலில் தனது நாள் பல வற்றைக் கடந்துவிட்ட ஓர் உயிர், அந்நாளை முற்றக் கடந்தொழிவ தற்கு முன்னே என்றாயினும் ஒருநாளில் அச்சுற்றத்தை வெறுத்து மெய்யுணர்வாகிய விளக்கை ஏற்றினால், அவ்விளக்கொளியைப் பற்றிச் சென்று, பின்னும் அவர்களோடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைத்தலும் கூடுவதாம்.
Special Remark:
`உடன்று` என்பது, எதுகை நோக்கி, `உடந்து` எனத் திரிந்தது. உணர், முதனிலைத் தொழிற்பெயர்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். -குறள் 38
என்பவாகலின், `அவ்வழி தூர்த்தல்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக.
``அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே`` -புறநானூறு 193
எனச் சான்றோரொருவர் சுற்றத் தளைக்கட் பட்டு வருந்தினமை இங்கு அறியத்தக்கது. `ஒருவர் உயிர்` என்னாது `ஓர் உயிர்` என்றது, இழிவு பற்றி.
இதனால், `சுற்றம் ஓம்புதலைப் பற்றுக்கொண்டு செய்யாது அறம்நோக்கிச் செய்யின் வறுமைத் துன்பம் உண்டாகாது` என, அத்துன்பம் நீங்குதற்கு வழி கூறப்பட்டது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். -குறள் 341
எனப் பின்னர்க் கூறலின், முன்னர்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. -குறள் 341
என்ற திருவள்ளுவனார்க்கும் இதுவே கருத்தாதல் அறிக.