ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 13. நல்குரவு

பதிகங்கள்

Photo

கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. 

English Meaning:
Seek not to Fill the Stomach - Pit; Fill the Birth Pit
To fill the stomach`s stony pit, they seek the precious gold;
But little do they know how hard it is to fill birth`s pit;
Only when true wisdom you attain that pit to rule,
Then that pit is filled, when life is washed clean and rendered fit.
Tamil Meaning:
மக்கள் அன்னமே (சோறே) யன்றிச் சொன்னமும் (பொன்னும்) தேடுதல், இயல்பாகவே தூர்ந்து போவதாகிய மட்குழிபோலாது, தூர்க்கினும் தூராத கற்குழி போன்ற வயிற்றை நிரப்புதற்கேயாம். ஆயினும், அப்பொன்னை நிரம்பக் குவித்து வைத்தவர்க்கும் வயிற்றை நிரப்புதல் இயலாததே எனினும், அதனை நிரப்புதற்கு வழி ஒன்று உண்டு; அவ்வழியை அறிந்தால் உள்ளம் தூய்மைப்பட்டு வயிறும் நிரம்பும்.
Special Remark:
ஒருவேளை நிரம்பியபின் அஃது அற்றொழிய, மறுவேளை வெறுவிதாய்விடுதல் பற்றி, ``அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது`` என்றார். அங்ஙனம் தூராத குழியைத் தூர்க்கும் வழி பிறப்பை நீக்கிக் கொள்ளுதலேயாகலானும், பிறப்பு நீங்குதல் வினை நீங்கியவழியேயாகலானும், `அது நீங்கும் வழியை அறிந்தால் வினை நீங்க அக்குழி தூரும்` என்றார். `அழுக்கற்றவாற்றானே அக்குழி தூரும்` என உருபு விரித்து மாறிக் கூட்டுக. `அவ்வழியாவது இறைவனை ஏத்துதலே` என்பது குறிப்பாதல், மேலைத் திருமந்திரம் பற்றி அறியப்படும்.
இதனால், `வயிற்றை நிரப்பும் துன்பம் செல்வம் உடையவர்க் கும் நீங்காமையை அறிந்து வறுமையால் உள்ளம் வருந்தாது நிறைவெய்தியிருத்தல் வேண்டும்` என்பது கருத்து.
``தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பது இரண்டே`` -புறநானூறு 189
என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது.