ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 13. நல்குரவு

பதிகங்கள்

Photo

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 

English Meaning:
IN VAIN PURSUIT OF ACCUMULATION
Misery of Making a Living
Garments to tatters torn, life a joyless desert becomes;
Loved ones and dear friends forsake, with no more love to spare;
Nothing more to give or ask, void of glory and pomp,
Neglected, like automatons they walk, sad and men.
Tamil Meaning:
ஒருவர்க்கு அவர் உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந் ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். நாட்டில் நடைப் பிணமான அவர்க்கு எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; அதனால் அவர் இல்லத்தில் யாதொரு விழாவும் இல்லை; பிற உலக நடையும் இல்லை; ஆகையால்.
Special Remark:
`கிழிந்ததேல்` என்னு வினையெச்சம் ``கிழிந்தது`` என முற்றாய்த் திரிந்தது. ``புடவை கிழிந்தது`` என்பது, `வறுமை வந்தது` என்பதனை உணர்த்திய குறிப்புச்சொல். அடைதல், இங்கு அதன் காரணமாகிய தெளிதலை உணர்த்திற்று. தெளியப்பட்டார், பெண்டி ரும், பிள்ளைகளும், பிற சுற்றத்தாருமாவர்.
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். -குறள் 1047
என்றார் திருவள்ளுவரும். ``இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்`` என ஔவையாரும் நல்வழியில் கூறுதல் காண்க. வறுமை எய்தினார்க்குப் பிறர்பால் பொருள்கொடுக்கும் நிலை இல்லை என்றல் கூறவேண்டாமையின், இங்கு, ``கொடை, கொள்ளல்`` என்றவை, உறவு பற்றி நிகழும் மகட்கொடை, மகட்கோடலேயாம். அவை இன்மையால் கொண்டாட்டமும் இல்லையாயிற்று. பிற உலக நடையாவன, கண்டவழி இன்முகம் காட்டலும், முகமன் கூறலும் போல்வன. ``இயங்குகின்றார்கட்கு`` என்றது, `பிறிது செயலில்லை` என்றவாறு. ``நாட்டில் இயங்குகின்றார்கட்கு`` என்பதனை, மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், நல்குரவினது கொடுமை கூறும் முகத்தால், அதனால் உள்ளந் திரியாமை நிற்றலின் அருமை குறிக்கப்பட்டது.