ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 13. நல்குரவு

பதிகங்கள்

Photo

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

English Meaning:
Pre-Occupation With Filling the Stomach-Pit
Even as the day dawns, men strive the stomach-pit to fill;
With needed tools; they seek hard the hungry void to stop;
But our only way is to praise Him whatever the way of life we pursue;
Sure then that pit is filled when, what in us is impure, is swept off.
Tamil Meaning:
`பொழுது விடிந்து விட்டதே; காலை உணவுக்கு என் செய்வது` என்று நிலையில்லாத வயிற்றை நிரப்புதற்கு வருந்தி, அதற்குரிய அரிய பொருள்களைத் தேடி அலைகின்றவர்களே! நீவிர் உங்கள் வயிற்றை நிரப்பினாலும், உங்கள் சுற்றத்தார் வயிற்றை நிரப்பினாலும், வேறு யார் வயிற்றை நிரப்பினாலும், குற்றமில்லை. அவைகளை நிரப்பும் முயற்சியால் சிவனை மறவாதீர்கள்; மறவாது நின்று துதியுங்கள். அப்பொழுதுதான் வினை நீங்கும்; வினை நீங்கினால் வறுமை நீங்கும்.
Special Remark:
வயிற்றினது இழிபு உணர்த்த வேண்டி அதனை, `பொய்க்குழி` என்னும் பெயரால் கூறினார். கூறவே, பின் வருவன வற்றையும் அதனோடு இயைய, ``குழி`` என்றார். எனவே, அதற் கேற்ப, `தூர்த்தல்` என்றார். ``தூர்த்து`` என்னும் செய்தெனெச்சம்,
``செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்`` -தொல். சொல். வினை
என்பதனால், இங்கு எதிர்காலத்தில் வந்தது. அழுக்கு, வினை மாசு. ``புகலூர்ப் பாடுமின் புலவீர்காள் - இம்மையே தரும் சோறும் கூறையும்`` ( தி.7 ப.3 பா.41) என அருளிச் செய்ததனாலும் சிவபெருமானை ஏத்துவார்க்கு வறுமை நீங்குதல் அறியப்படும்.
இதனால், `சிவபெருமானை ஏத்தாமையே வறுமைக்குக் காரணம்` என்பது கூறும் முகத்தால், அவ்வறுமை வந்த காலத்து அது காரணமாக அவனை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.