ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து

பதிகங்கள்

Photo

அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.

English Meaning:
Dance in the Beyond as Compassion Embodied

Beyond, beyond, the universes seven,
High above Sakti and Sadasiva,
The dark-throated Lord,
As compassion embodied,
Danced in rapture
For Uma there to witness.
Tamil Meaning:
பிரகிருதி உலகங்களுக்கு அப்பால் உள்ளவை அசுத்த மாயா உலகங்கள். அவற்றிற்கு அப்பால் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் தத்துவ புவனங்கட்கு அப்பால் உள்ளவை சத்தி தத்துவ புவனமும், சிவ தத்துவ புவனமும், அவைகளில் முறையே `சத்தி` என்றும், `சிவன்` என்றும் இருதிறப்பட்டு நின்று ஐந்தொழில் புரிகின்ற சிவன், அத்தொழிலின் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு சத்தி காணத்தான் ஆடலை விரும்பி ஆடுகின்றான்.
Special Remark:
எனவே, அங்ஙனம் ஆடுகின்ற கூத்தே சுந்தரக் கூத்தாம்` என்பது போந்தது. சுந்தரம் - அழகு. எனவே, அது வடிவைக் குறிக் -கின்றது. வடிவுதான் `அருவம், அருவுருவம், உருவம் என மூவகைப் படுதல் பலவிடத்தும் சொல்லப்பட்டது. அவற்றுள் உருவத்திருமேனி கொண்டு செய்யும் கூத்தையே நாம் கூத்தாகக் காணினும், அதனோடு ஒப்ப ஐந்தொழில் இயற்றும் மற்றைத் திருமேனிகளின் செயலும் சுந்தரக் கூத்து` என்றே இங்குக் கூறப்படுகின்றன. `சூக்கும நடனம், அதிசூக்கும நடனம்` எனச் சாத்திரங்களில் கூறப்படுவனவற்றை இங்கு நினைவு கூர்க. இதனால் மேல் தொகுத்துக் கூறிய கூத்து ஐந்தனுள் முதலாவதாகிய சிவானந்தக் கூத்து ஒன்றும் சொரூப நிலைக் கூத்தம், ஏனைய நான்கும் தடத்தநிலைக் கூத்தும் ஆதல் அறிக.
``அண்டங்கள் ஏழ்`` என்றது, பிரகிருதி அண்டங்களை யாதலின், பின்னர்க் கூறப்பட்டவை அசுத்த மாயை, சுத்தமாயா அண்டங்களாதல் விளங்கிற்று. சிவன் இன்றிச் சத்தியில்லையாதலின், சத்தியைக் கூறவே, சிவன் தானே பெறப்பட்டான். `சத்தி, சிவன்` என்பன அவரையும், அவர்க்கு இடமாய தத்துவங்களையும் குறித்து நின்றன. `உச்சிமேல் உள்ளது` என ஒருசொல் வருவித்து முடிக்க. ``கண்டம் கரியான்`` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது. சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தலாம். உகத்தல் தன் காரியம் தோற்றி நின்றது.
இதனால், `சுந்தரக் கூத்தாவது ஐந்தொழில் பற்றிய கூத்து` என்பது கூறப்பட்டது.
(பதிப்புக்களில் இதனை அடுத்துள்ள ``கொடுகொட்டி பாண்டரம்`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்குரியது.)