ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்

பதிகங்கள்

Photo

நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம்
நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.

English Meaning:
Tamil Meaning:
மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது.
Special Remark:
சித்தர் மரபில் உயர்ந்த பொருள்களைப் பிறர் அறியாவண்ணம் இழிந்தனபோல மறைத்தக் கூறுதல் வழக்கம். அம்முறையில் இஃது அவர்களால் `நாய் ஓட்டும் மந்திரம்` எனக் குறிக்கப்படுதலை இங்குக் கொண்டு கூறினார். ``கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி``8 முதலியனவும் காண்க. நாயை ஓட்டுமிடத்தச் சொல்லப்படுவது. `சீ` என நெட்டெழுத்தாய் இருப்பினும், அதுவே அதனைக் குறிக்கும் தொடராகாமல், குறிப்பால் பொருளையுணர்த் தலின், `சி` எனக் குற்றெழுத்தையே குறித்ததாயிற்று. நால் வேதங்களும் சிவபிரானது பெருமையை விரித்தலால், `இதுவே நால் வேதங்கள்` என்றும், சிவனே இதன் பொருளாதல் பற்றி ``நாதன் இருப்பிடம்`` என்றும், ``நாதந்த சோதி`` என்றும் சிவன் பொது மக்களால் அறிதற்கரியன ஆதலின் தம்மைப் பிறர் போல வைத்து, `இம் மந்திரத்தை நாம் அறியோம்` என்றும் தமிழ், ஆரியம் இரண்டாலும் கூறி வலியுறுத்துவார், ``நான்மறை நால்வேதம்`` என்றும் கூறினார்.
இதனால் மகாகாரண பஞ்சாக்கரமே எல்லாமாய் இருத்தல் கூறப்பட்டது.