ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்

பதிகங்கள்

Photo

அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட்(டு) அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

English Meaning:
Chant ``Si`` and Cross the River of Life

All that is spoken in Vedas, Vedangas and Agamas
Are in my Lord`s One Letter contained
Freed of doubts,
If that One letter ``Si`` is consummated,
The boat of life reaches the lovely shore across.
Tamil Meaning:
வேதம், வேதாங்கம், வேதாந்தம் முதலாக உள்ள அனைத்து நூல்களையும் ஒருவன் ஓதி உணர்ந்தாலும் ஏனெனில், சிவன் இருப்பது ஓர் எழுத்திற்குள்ளே. (அஃதாவது, `சி` என்னும் எழுத்தின் உள்ளேயாம். எனவே, `அதன் உண்மையை உணராமல், மற்றை எத்தனை நூல்களை ஓதி உணர்ந்தாலும் அவனை உணர்தல் இயலாது` என்பதாம்.) இது கேட்பதற்கு முக வியப்பாய் இருக்கும் ஆகையால், `இஃது உண்மையாய் இருக்க முடியுமா` என எழும் ஐயம் நீங்குதல் அரிது. முன்னைத் தவத்தாலும், குருவருளாலும் அந்த ஐயம் நீங்கப் பெற்று அதனை உறுதியுடன் சாதித்தால் அங்ஙனம் சாதிக்கின்ற ஆன்மாத் தான் என்று அடைந்தறியாத அழகிய கரையை அடைந்த மரக்கலத்திற்கு ஒப்பாகும்.
Special Remark:
அஃதாவது; `பிறவியாகிய கடலைக் கடந்து, வீடுபேறாகிய கரையை அடையும்` என்பதாம். வருவித்துரைத்தன இசையெச்சங்கள். ``ஓர் எழுத்து`` என்றது முன் அதிகாரத்தில் கூறப்பட்ட இரண்டெழுத்தில் வகாரம் நீங்க நின்ற சிகாரத்தினை ஆதல் எளிதின் விளங்கும்.
`தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகா காரணம்` என ஐந்து வகையாகக் கூறப்படுகின்ற பஞ்சாக்கரத்துள் சமய தீக்கைப் பேற்றால் தூல பஞ்சாக்கரத்தை ஓதிச் சரியையிலும், விசேட தீக்கைப் பேற்றால் சூக்கும பஞ்சாக்கரத்தை ஓதி முன்னர்க் கிரியையிலும், பின்னர் யோகத்திலும் நின்று, நிருவாண தீக்கைப் பேற்றால் அதி சூக்கும பஞ்சாக்கரத்தைக் கேட்டுப் பொதுப்பட உணருமாற்றால் தத்துவ சுத்தி ஆன்ம தரிசன சிவரூப நிலைகளையடைந்து, பின், அதனை நன்கு சிந்தித்துச் சிறப்பாக உணருமாற்றால் ஆன்ம சுத்தி சிவ தரிசன நிலைகளையடைந்து, பின் அதனை நன்கு தெளியுமாற்றால் காரண பஞ்சாக்கரத்தை ஓதிச் சிவயோக நிலைமை அடைந்து, பின் நிட்டை கூடுமாற்றால் மகாகாரண பஞ்சாக்கரத்தை ஓதிச் சிவபோக நிலையைப் பக்குவான்மா அடையும் என்க.
`சிவ யோகம்` என இங்குக் கூறப்படுவது, ஆன்மாத் தன்னை உணர்தல் இன்றிச் சிவனை மட்டுமே உணர்ந்து நிற்கும் நிலை. இதனால் இங்கு ஆன்ம எழுத்தாகிய யகாரம் நீக்கப்படுகின்றது. ஆன்மாத் தற்போதத்தை இழத்தலும் சிவபோதமே போதமாக நிற்றலும் திருவருளேயாகலின் இங்கு அருள் எழுத்தாகிய வகாரம் இருத்தல் இன்றியமையாததாகின்றது.
இந்தச் சிவயோக நிலை அருள்நிலையேயன்றி, ஆனந்த நிலையன்று. சிவபோதம், மேலிட மேலிட சிவானந்த வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்க அதனுள் ஆன்மா மூழ்குதலே ஆனந்த நிலை. அதுவே நிட்டை நிலை. அங்கு ஆன்மா அருளையும் நினையாது மது உண்ட வண்டுபோல் அந்த ஆனன்தமாயே நிற்றலால் அவ்விடத்து அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்குவதாயிற்று.
``மாயநட் டோரையும் மாயா மலம் எனும் மாதரையும்
வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு, மெய்யருளாம்
தாயுடன் சென்று,பின் தாதையைக் கூடிப்,பின் தாயை மறந்(து)
ஏயும் அதே நிட்டை யென்றான் எழிற்கச்சி ஏகம்பனே``
என்னும் பிற்காலப் பட்டினத்தடிகள் பாடலும் அதிசூக்கும, காரண, மகா காரண பஞ்சாக்கரங்களையே குறிப்பால் உணர்த்துதலை ஓர்ந்துணர்க.
தூல சூக்கும பஞ்சாக்கரங்களை ஓதுதல் சகல நிலையாய் முடிய, அதிசூக்குமம் முதலாக ஓதுவனவே சுத்த நிலையாகும். அதனுள் கேட்டல் சுத்த சாக்கிரம். சிந்தித்தல் சுத்த சொப்பன சுழுத்திகள். தெளிதல் சுத்த துரியம் நிட்டை சுத்த துரியாதீதம்.
ஆன்ம சுத்திக்குப்பின் ஆன்மா அடையும் ஆன்ம லாபம் இரண்டு. ஒன்று பாச நீக்கம். இதுவே அருள்நிலை மற்றொன்று சிவப்பேறு. இதுவே ஆனந்த நிலை, சிவஞான போத சூத்திரங்களுள் எட்டாவது முதலாக நான்கு சூத்தரங்களாலும் முறையே கேட்டல் முதலிய நான்கும் கூறப்பட்டன. பன்னிரண்டாம் சூத்திரம் அணைந்தோர் தன்மை கூறுவது.
உமாபதி தேவர் தாம் அருளிச் செய்த எட்டு நூல்களுள் இறுதி நூலாகிய சங்கற்ப நிராகரணத்து இறுதியில் இப்பஞ்சாக்கரங்களின் உண்மையே ஒருவாறு விளங்கும்படி பரம சித்தாந்தமாக ஓதியருளினார். அப்பகுதி வருமாறு:-
``பதிபசு பாச முதிர் அறி வுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப், பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்,
ஈனம்இல் ஞாதுரு, ஞானம், ஞேயம் என்(று)
இசைய மூன்றாய், பசு, பதி என்(று) அவற்(று)
இரண்டாய், இரண்டும் ஒன்றின்ஒன் றாகத்
திரண்டாம் பயன்எனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிறை யியற்கை இயம்புதல் தகுமே``
சிவப்பிரகாசத்து, ``ஆசுறு திரோதம் மேவாது`` என்னும் செய்யுளின் பொருளை வல்லார்வாய்க் கேட்டுணர்க. `அதிசூக்கும` முதலிய பஞ்சாக்கரங்கள் உலகப்பற்று `அற்று` ஞான வேட்கை கொண்டு, ஞானாசிரியரை அடைந்து ஞானோபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுவார்க்கே உரியன. மற்றையோர்க்குத் தூலமும், சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்களே உரியன.
தூலமும், சூக்குமமும் ஆகிய இருபஞ்சாக்கரங்களும் பிரணவத் தோடு கூட்டியும், கூட்டாதும் ஆசிரியர் உபதேசித்தபடி ஓதப்படும். அதி சூக்குமம் முதலிய மூன்றுவகைப் பஞ்சாக்கரங்களும் பிரணவம் இன்றியே ஓதப்படும்.
``எல்லா உணவிற்கும் உப்பு இன்றியமையாதது. ஆயினும் சிறந்த உணவாகிய பாலுக்கு உப்புக் கூடாது. அதுபோல எல்லா மந்திரங் கட்கும் பிரணவம் இன்றியமையாதது. ஆயினும் மிகச்சிறந்த சிவமூல மந்திரமாகிய பஞ்சாக்கரத்திற்குப் பிரணவம் தேவையில்லை`` என்கின்ற ஒரு மரபு உண்டு. அது அதிசூக்குமம் முதலிய பஞ்சாக்கரங்களை நோக்கி எழுந்ததேயாகும்.
பிற மந்திரங்கள் கூட நிர் பீச தீக்கையில் பிரணவம் இன்றியே சொல்லப்படும்.
இனி, உமாபதி தேவர், தமது, `கொடிக்கவி` நூலில் ``எட்டெழுத்து, நாலெழுத்து``l எனக் கூறியவை `பிராசாத பஞ்சாக்கரம், தார பஞ்சாக்கரம்` எனக் கூறப்படுமேயன்றி அதிசூக்கும பஞ்சாக்கரம் என கூறப்படாது. அவையும் யோகிகட்கே உரியன. எட்டெழுத்து, நாலெழுத்து முதலியவற்றை அச்செய்யுளின் உரையிற் காண்க.
ஆகம வேதங்களைக் கூறவே இனம் பற்றி வேதாந்தமும் கொள்ளப்பட்டது. ``ஓதினும்`` என்னும் உம்மை சிறப்பு. அதனால் `அறிதல் இயலாது` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது. ``ஒன்றையும்`` என்னும் உம்மை முற்று. அதனால் அதனது ஆற்றல் மிகுதி உணர்த்தப்பட்டது.
அதிகாரத்தை வேறுபடுத்தி விரிவு கூறாவிடினும் இம்மந்திரத்திற்குப் பிறகும் இப்பொருளையே கூறினமை காண்க.
இதனால், `மகா காரண பஞ்சாக்கரமாவது இது` என்பது குறிப்பால் உணர்த்தி, அதனது ஆற்றல் மிகுதி தெளிவாக்கப்பட்டது.