ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி

பதிகங்கள்

Photo

சிவமாகி மும்மலம் முக்குணஞ் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத் தைக்கியத்
துவமா கியநெறி சோகம்என் பார்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

English Meaning:
Way of So-Ham

Siva Becoming,
The Malas triple perishing,
The Gunas triple perishing,
The Muktis triple attaining,
One with Tattvas uniting
That the way of ``So-ham`` is;
Like those who follow this Way
The Immaculate Siva Himself reveals.
Tamil Meaning:
சித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களையும், ஏனைச் சமயத்தார் முடிவாகக் கூறுகின்ற முக்குணங்களையும் (சாத்துவிக ராசத தாமதங்கள்) போக்கிச் சிவமாம் தன்மையை எய்திச் சரியை முதலிய தங்களால் உண்டாகும் அந்த ஞானத்தின் பயனாகப் பெறுகின்ற மும்முத்திகளையே, `தத்துவமசி` `ஸோஹமஸ்மி` என்னும் மகா வாக்கியங்கள் கூறும் முத்தி நிலையாக உணர்ந்து, அந்த மகாவாக்கியப் பொருள்களை அனுபவமாக உணர வல்லவர்கட்கு நன்மையே நிறைந்து, தீமை சிறிதும் இல்லாதவனாகிய சிவன், பிற பொருள்களை யெல்லாம் விலக்கித் தான் ஒருவனே விளங்கி நிற்பான்.
Special Remark:
சிவன் அவ்வாறு விளங்கி நிற்றல், ஞாயிறு பிற பொருள்களைக் காண்பவர்கட்கு அவற்றைக் காட்டித் தன்னைக் காட்டாது நின்று, தன்னைக் காண்பவர்கட்குப் பிற பொருளைக் காட்டாது, தன்னையே காட்டி நிற்றல் போல்வது. `சிவன் இவ்வாறு தன்னையே காட்டி நிற்பதே முத்தி நிலை` எனவும், `தன்னைக் காட்டாது பிறபொருள்களைக் காட்டி நிற்பதே பெத்தநிலை` எனவும் உணர்க. ``சிவம் ஆகி`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டுக. ``தவம்`` என்பது முன்னர் அதன் பயனாகிய ஞானத்தையும், பின்னர் ஞானத்தால் அடையும் பயனையும் குறித்த இருமடி யாகுபெயர். ``ஐக்கியம்`` என்றது, `அசி` என்றபடி. மூன்றாம் அடியில் உள்ள ``துவம்`` தன்மை. ``துவமாகிய நெறி`` என்பதை, ``சேகம்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `தத்துவ மஸி, ஸோகமஸ்மி இவற்றின் தன்மையாய நெறி` என உரைக்க. மகாவாக்கியங்கள் இங்குத் தம்மை யுணர்த்தி யொழியாது, தம் பொருளை உணர்த்தி நிற்றலின் `தன்மை` என்றது அவை பற்றிய அனுபவங்களையாம். நெறி - ஞான நெறி. இதுவும் ஆகுபெயரால் அதன்பயனையே குறித்தது. ``சிவமாம் அமலன்`` என்று, `நன்றுடையானைத் தீயதில்லானை``8 எனஅறாற்போல்வது. இங்ஙனம் மறுதலைப் பொருளையும் உடன் கூறியது முத்திநிலையில் சிவன் உயிருக்குப் பிற பொருளைக் காட்டாமையை உணர்த்தற்கு. ``பொய்காட்டா மெய்யா``l என்றதும் காண்க.
இதனால், `வேதாந்தமுத்தி சித்தாந்த முத்தியே` என உணர வல்லவர்களே வேதாந்த ஞானிகளாய், மும்முத்திப் பயன் பெறுவர் என்பது கூறப்பட்டது.