ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 29. சீவன்

பதிகங்கள்

Photo

மாயா உபாதி வசத்தாகும் சேதனத்(து)
ஆய குருஅரு ளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோ டொன்றின்ஒன் றாதுயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.

English Meaning:
The Guru Illumines You

Harassed art thou
By Maya`s manifestations;
But when the Guru Illumined
By His grace lights you up
Your troubles entire cease;
The Jiva illumined in Jnana
Will Turiya State reach you,
You may yet accomplish it;

Tamil Meaning:
மாயா காரியமாகிய கருவிக்கூட்டம் சடமாகலின், அது சித்தாகிய உயிருக்குக் கூடாப் பொருளாய்க் குற்றமாகும். ஆயினும் அவ்வுயிரின் உள்ளே என்றும் உள்ள சிவன் அதனது பக்குவம் அறிந்து அருள் காரணமாகக் குருவாகி எதிர் வந்து அதனை அக்குற்றத்தினின்றும் பிரிவிக்க, அஃது அங்ஙனமே பிரிந்து திருவருளில் புகுந்து, அதன் கண் பேருறக்கத்தை எய்தி அமைதியுற் றிருக்கும். அருள் உறக்கம், இருள் உறக்கம் அன்றாகலின் அந் நிலையில் உயிர் அறிவே வடிவாய் விளங்கும்.
Special Remark:
உபாதி - செயற்கைப் பொருள்; மாசு, சேதனம் - அறிவுடைய பொருள். ``சேதனத்து ஆய குரு`` என்றது, `சிவம்` என்றபடி அதனால் சிவமேகுருவாய் வருதல் பெறப்பட்டது. `குரு தூண்ட` என இயையும். தூண்டுதல் - விரிந்து செல்லும்படி அதற்குரிய உண்மையை உணர்த்துதல். அஃது ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தமையை* அறிவித்தலாம். `அதினின்றும் தூண்ட` என்க. `உயிர் உபாதி ஒன்றினோடும் ஒன்றாது துரியம் புகுந்து அறிவாகவே ஓயும்` என முடிக்க. துரியம் - பேருறக்கம். மலத்தின் உறங்குதல் கேவல துரியம். திருவருளில் உறங்குதல் சுத்த துரியம். இங்குக் குறிக்கப்பட்டது சுத்த துரியமே என்பது வெளிப்படை.
இதனால் உபாதி வசத்தால் மாசுபட்டுச் செயற்கை நிலையில் இருந்து உயிர் அம்மாசினின்றும் நீங்கித் தூயதாய்த் தனது இயற்கை நிலையை அடையுமாறு கூறப்பட்டது.