ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 29. சீவன்

பதிகங்கள்

Photo

உண்டு தெளிவன் றுரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவன்உருக் கொள்வர் கருத்துளே.

English Meaning:
Practise Yoga in Perseverence

You may not for Yoga inclined be,
But if your Guru Illumined teaches you,
You may yet accomplish it;
And so persevere
In lives several;
And seeing you thus practise,
Siva`s Form will in your thought arise.
Tamil Meaning:
உயிர்கட்கு முதற் காலத்திலே, `சிவனை அறியும் வாயில் உண்டு` எனக் கூறுதற்கு அவனைத் தம்முன்னே கொண்டு யோகம் பயில்கின்ற குணம் இல்லவிட்டாலும் பின்பு அக்குணத்தை அடைந்து தம்முன்னே கொண்டு யோகம் பயிலும். ஆகவே, உயிர்கட்கு என்றாயினும் ஒருநாள் சிவனைத் தெளிவாக உணரும் உணர்வு உண்டாகவே செய்யும்.
Special Remark:
`அவ்வுணர்வு முதற்கண் தோன்றாமைக்குக் காரணம் பக்குவம் வாயாமையும், பின்பு தோன்றுதற்குக் காரணம் பக்குவம் வாய்த்தலும் ஆம்` என்பது கருத்து. `பக்குவம் சிவனது அருள் நோக்கத்தால் வாய்க்கும்` என்பது, ``பண்டு பயிலும் பயில் சீவனார்`` என்பதனால் குறிக்கப்பட்டது. பயில் சீவனார் - பயில்வை உடைய சீவனார் பயிலுதல் - நீங்காது உடன் இருத்தல். உரைத்தற்கு, `உணரும் வாயில் உண்டென` என்னும் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஏகாரத்தைப் பிரித்து, ``குணம்`` என்பதனோடு கூட்டுக. `யோகம்` என்பதன்முன் உள்ள இகரம் வடசொல் நோக்கி வந்தது. இவ்வேகாரம் தேற்றம். `தெளிவு உண்டு` என மாற்றி யுரைக்க.
இதனால், முன் மந்திரத்தில், `அறியும் அளவல்லன் மாதேவன்` என்பது பற்றி நிகழும் ஐயம் அறுக்கப்பட்டது.