ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்

பதிகங்கள்

Photo

தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடல்உயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளிஒளி தான்இருட் டாகுமே.

English Meaning:
Sivaditya is Space, Light and Darkness

Himself as the Three Lights (Sun, Moon and Fire) in one stands;
Himself as Brahma and Vishnu stands established;
Himself as life and body indistinguishably stands
Himself Space, Light, and Darkness too.
Tamil Meaning:
இங்குக் கூறிவரும் சிவாதித்தன் தான் ஒருவனே யாயினும் சுடர்களை எங்கும் வீசுகின்ற ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களும் ஒன்று கூடினாற் போன்ற பேரொளியாய் இருப்பான்; தன்னை அழிப்பவனாகப் பலர் கருதினானுலும் அயனாய் நின்று படைப் பவனும், அரியாய் நின்று காப்பவனும் தானேயாகும். மேலும் அவன் உயிர்களில் மட்டுமன்றி, உடல்களிலும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்றான். இன்னும் தான் ஒருவனே ஆகாயமாயும், அதன் கண் விளங்குகின்ற ஒளிகளாயும் நிற்றலேயன்றி இருளாகவும் ஆகின்றான்.
Special Remark:
`இஃது அதிசயம்` என்பது குறிப்பெச்சம். `சிவாதித்தன் உலகில் காணப்படுகின்ற ஒளிப்பொருள்களோடு ஒத்த ஒளியுடைய னல்லன்; அவற்றினும் பலமடங்கு மேம்பட்ட ஒளியினை உடையன்` என்பது கூறுமுகந்தான், `அவன் உதயஞ் செய்யப்பெற்ற உயிர்க்கு வேறு வேண்டத்தக்க பயன் யாதுமில்லை` என்பது முதலடியில் குறிக்கப் பட்டது. தாபித்தல் - நிலை நிறுத்தல். `நடாத்துதல்` என்றபடி. இதற்கு `உலகத்தை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. `உடல் உயிரின்கண்` என உருபு விரிக்க. இருள் முக்குணங்களும் தாமத குணத்தின் காரியம் ஆகலின் அக்குணத்திலும் தாமத குணத்தின் காரியம் ஆகலின் அக்குணத்திலும் நிறைந்து நிற்றல் பற்றிச் சிவனை ``இருட்டுமாம்`` - என்றார்.
இதனால், சிவாதித்தனது ஒப்புயர்வில்லாத அதிசய நிலை கூறப்பட்டது.