ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்

பதிகங்கள்

Photo

கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.

English Meaning:
Lord opens the sense gates

At the Feet of the Lord
Who this body as His temple chose
Lies the expanse of Vedas;
At the Feet of the Lord
Who these gates made His own
Lie the Nadis ten;
He who; our adoration received
Subduing our senses five
In me entered operating the gates wide;
He, My Lord, the Nandi Great.
Tamil Meaning:
எங்கள் பெரும்பெருமான் மக்கள் உடம்பைக் கோயிலாக் கொண்ட நிலையில் புழைக்கடையாகிய மூலாதாரத்தை யும், அதற்குமேல் குய்யத்திற்கு அணித்தாயுள்ள சுவாதிட்டானத்தை யும் தன்னை அக்கோயிலிலே காண்பதற்குரிய வழிகளாகக் கொண்டும், உடம்பின் உள்ளே உள்ள நாடிகளில் தலையானவையாம் பத்து நாடிகளின் செயற்பாடுகளை அக்கோயிலில் நிகழும் வழி பாட்டுச் செயல்களாக ஏற்றும் விளங்குதல் செய்து, அதனால் புலன்கள் ஐந்தனையும் அடங்கப் பண்ணி, அவ்வுடம்பையே தான் மக்கள் உயிர்க்கு அருள் பண்ணும் வாயிலாகக் கொண்டிருக்கின்றான்.
Special Remark:
`அதனால் மக்கள் உடம்பு அவன் விளங்கி நிற்கின்ற இலிங்கமும் ஆகின்றது` என்பது குறிப்பெச்சம். ``அடி`` இரண்டும் `மூலம்` என்னும் பொருளைத் தந்தன.
பிறகிடுதல் - புறங்காட்டுதல்; தோல்வியுறுதல். `பிறகிடு வித்து` என்பதில் விவ்விகுதி தொகுக்கப்பட்டது.
யோக முறையில் சிவனை உடம்பினுள்ளே காணுதல் அநுபவமாதல் பற்றி, மக்கள் உடம்பு அவனது இலிங்கமாதற்குத் தடையின்மை இதனால் கூறப்பட்டது.