ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்

பதிகங்கள்

Photo

ஆய மலர்இன் அணிமலர் மேலது
வாய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.

English Meaning:
The Sixteen-Petalled Lotus in Visuddhi Adhara
Leads to Knowledge-Bliss

Above the discriminating heart`s lotus
Is that jewelled flower
Of ten and six petals;
There, Awareness Pure, turns into Bliss of Siva
And to Jnana (Light of Knowledge) that is Reality Supreme.
Tamil Meaning:
ஆராய்ச்சிக் கருவியாகிய மனத்திற்கு இடமாய் உள்ள இருதய தாமரையாகிய இனிய அழகிய மலரின் மேல் உள்ள தாகிய ஓர் ஆதாரமாய் நிற்கும் இதழ்கள் பதினாறும் அவ்விடத்திலே உள்ளன. அதனை அடைந்த அறிவே மாசு நீங்கிச் சிவத்தோடு கூடி அதன் ஆனந்தத்தைப் பெற்று பின் அந்தச் சிவத்தின் வேறாய் நில்லாது ஒன்றாய் நிற்கும் முடிநிலையை எய்தும்.
Special Remark:
இருதயத்திற்குமேல் உள்ள ஆதாரம் விசுத்தி. அதனை அடையும் யோகமே ஆதார யோகத்தின் முடிநிலைக்கு அணித்தாவது ஆதலின், அதற்குக் கீழ் நிற்கும் யோகமெல்லாம் `யோகம்` எனப் படாது என்றற்கு இவ்வாறு கூறினார். விசுத்தி பற்றிய விளக்கத்தைத் தந்து, அதன் பின்னர், ``தூய அறிவு`` என்றமையால், அதனை அடைந்த அறிவு` என்பது பெறப்பட்டது. முடிநிலையை அடைதலை `விளைதல்` - எனக் கூறினார். ``மேலது`` என்பதன் ஈற்றுக் குற்றிய லுகரம் கெடாது நின்று உடம்படு மெய்பெற்றது. உம்மை இரண்டனுள் முன்னது இறந்தது தழுவிய எச்சம். பின்னது முற்று.

இதனால், `யோகத்தைக் கடைபோகச் செய்யாவிடின் அஃது யோகமாய்ப் பயன் தராது என்பது கூறப்பட்டது.