ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்

பதிகங்கள்

Photo

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.

English Meaning:
Characteristics of Jnani

The Jnani masters all sacred lore on earth,
And the attainments sixty and four
And espies the Land of Mauna
And all other land besides;
He sees the goal of all Vedas
And sees Lord and himself in united in one.
Tamil Meaning:
`ஞானத்தை விரும்புபவன்` என்று சொல்லப் படுவோன், உலகில் விளங்கித் தோன்றுகின்ற சமய நூல்கள் அனைத்தையும் உணர்ந்த உணர்வோடு, மன ஒடுக்கம் வரும் நிலையையும், முழுமையாக எண்ணப்படுகின்ற `எட்டு` என்னும் தொகையைப் பெற்றுள்ள சித்திகளையும், இவ்வுலகமேயன்றி, ஏனை மேல் கீழ் உலகங்களின் இயல்புகளையும், இருக்கு முதலிய நான்கு வேதங்களின் முடிவாகிய `ஆரணியகங்கள், உபநிடதங்கள்` என்பவற்றின் பொருள்களையும், எல்லாவற்றிற்கும் முதல்வனாகிய இறைவனது இயல்பையும், அவனுக்கு என்றும் அடிமையாகின்ற தனது இயல்பையும் உணரும் பண்புடையவனேயாவன்.
Special Remark:
``ஞானி`` என்றது மேற்கூறியவாறு பொருள் படு மாற்றைப் பின் வருவனவற்றால் அறிக. நன்நூல் - ஞானநூல். இங்ஙனம் பல நூலும் கண்டபின்பே, பொய் பொய்யாய் ஒழிய மெய் மெய்யாய்த் தோன்றும் என்பது பற்றி, இங்ஙனம் ஓதினார். ``நூல் பல கல்`` 1 என்று ஔவையாரும் கூறினார். ``கல்லார் நெஞ்சில் - நில்லான் ஈசன்`` 2 என்று அருளிச்செய்ததும் இது பற்றி. ``கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்`` என்பது பழமொழி. இதில் ``கண்டது`` என்பது கொள்கை வேறுபட்ட அறிஞர் பலரும், `இதுவே நன்னூல்`` எனக் கண்டது என்பதாம். சைவ சந்தான குரவர் நால்வருள் ஒருவர் அருட் குரவரது அருளுரையைப் பெறுதற்குமுன் `சகலாகம பண்டிதர்` எனப் பலராலும் புகழப்பெற்றிருந்தமை அறியத்தக்கது.
இதனால், சுத்த சைவராக வேண்டுவார் கேள்வி ஞானத்திற்குப் பின் சிந்தனையால் முதிர்ச்சி பெறவேண்டுதல் கூறப்பட்டது.