ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்

பதிகங்கள்

Photo

காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி உட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.

English Meaning:
Path of Dvadasa Marga Saivam (Yoga)

In the lobes of their ear,
They wear the double ring of gold,
Around their necks,
They wear the double string of rudraksha;
Their holy body thus adorned
They sit quiescent, chanting mantras
And feel their way inward
Through the twelve steps in the ladder
Of the Soul`s ascension to Siva
—Of such are the peerless school of Saivas.
Tamil Meaning:
காதில் பொன்னாற் செய்யப்பட்டுப் பொருந்திய கடுக்கன் இரண்டை அணிந்து, சிவாகமங்களில் சொல்லப்படுகின்ற `தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்று உடம்புகளையும் சோதித்துத் தூய்மை செய்யப் பெற்று, துவாதச கலாப் பிராசாதயோக நெறியில்நின்று, அந்நிலைக்கு ஏற்பத் தாம் உபதேச முறையாற் பெற்ற திருவைந்தெழுத்தையும் ஓதுபவர் மேற்கூறியவரின் வேறுபட்ட ஒருசார் சைவராவர்.
Special Remark:
தூல உடம்பையே ``திருமேனி`` என்றார். சமய விசேட தீக்கைகளால் தூய்மை பெற்றமை தோன்ற அவ்வாறு கூறினார். சூக்குமம் பர உடம்புகளை ``உட்கட்டு`` எனக் குறித்தார். ``செய்து`` என்றது, `செய்வித்துக் கொண்டு` என்றபடி. ஒருசைவர் - மற்றொருசைவர்; என்றது `ஞானச்சைவர்` என்றவாறு. மேலை மந்திரத்துள் சரியை கிரியையினுள்ளும், இதன்கண் யோகம் ஞானத்துள்ளும் அடக்கப்பட்டன. இங்குக் குறிக்கப்பட்ட ஞானம் கேள்வியளவினது. இவற்றை ``சோதனை செய்து`` எனவும், துவாதெச மார்க்கராய்`` எனவும் போந்த குறிப்புக்களால் அறிக.
இதனால், அவருள் மற்றொருசாராரது இயல்பு கூறப்பட்டது.