ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்

பதிகங்கள்

Photo

ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

English Meaning:
Four Paths of Saivam

The Lord created earth in wisdom infinite
And He made it abode of man
How shall I sing His Majesty!
He is mighty as Mount Meru,
From whence He sways the three worlds;
And He is the Four Paths of Saivam too here below.
Tamil Meaning:
பல உலகங்களையும், அவை அடங்கியுள்ள பல அண்டங்களையும் ஒரு சேரப் படைக்கின்ற பேரறிவினையுடையவ னாகிய சிவனது பெருமையைக் கூறுமிடத்து, எழுச்சியை உடைய இந்த உலகங்கள் மூன்றினையும் தன்னடிப் படுத்து ஆள்கின்ற தலைவனாம் அவன், விளங்கத் தோன்றும் நிலைக்களம் நால்வகைச் சைவமுமாகும்.
Special Remark:
`ஊர், உலகம் என்பன அவற்றிற்கு இடமான உலகத்தை யும், அண்டத்தையும் ஆகுபெயரால் உணர்த்தின, ஏர்தல் - எழுச்சி யுறுதல். `மேருவும்` என்பது பாடமன்று. `இலங்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``தாரணி`` என்றது, `நிலைக்களம்` என்ற வாறு. சைவ சமயத்தின் பெருமை கூறுவார். அதன் முதல்வனாகிய சிவனது பெருமையை முன்னர்க் கூறினார்.
இதனால், `முழுமுதற் கடவுளாகிய சிவன் விளங்கித் தோன்றும் சமயம் சைவசமயமே` என்பதும், `அது நால்வகைப்படும்` என்பதும் கூறப்பட்டன, அந்நால்வகையும் வருகின்ற மந்திரங்களிலும் அதிகாரங்களிலும் அறியப்படும்.