ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை

பதிகங்கள்

Photo

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.

English Meaning:
Greatness of Amuri Dharana

He the Nandi called it: the Hero`s recipe, Heaven`s elixir, and Sakti`s potion
Some know it as the Medicament Primus
It is specific that is of radiant light
Hard to describe to world at large.
Tamil Meaning:
அமுரியை, `வீரத்தைத் தரும் மருந்து` என்றும், `தேவர் உண்கின்ற அமுதம்` என்றும், `மகளிரோடு மெலிவின்றிக் கூடுதற்குரிய மருந்து` என்றும் எங்கள் நந்தி பெருமான் அருளிச் செய்தார். `இஃது இறைவனே மக்கட்குப் படைத்துத்தந்த இயற்கை மருந்து` என்று குருமொழியால் அறிகின்றவர்கள், இதன் பயனை இவ்வுலகத்தில் கண்கூடாகக் காணும் மருந்து இது. இதன் பெருமையைப் பொதுமக்கட்குச் சொல்லுதல் கூடாது.
Special Remark:
`சொன்னால் இதனைப் பெறும் முறை அறியாமையால் சிறுநீரையே உண்பவராவர்` என்பது கருத்து. நாரி, பன்மை ஒருமை மயக்கம். ஆதி - இறைவன். சோதி மருந்து, வினைத்தொகை. இதன்கண் உயிரெதுகை வந்தது.
இதனால், அமுரியின் சிறப்பு விரித்துக் கூறப்பட்டது.