ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை

பதிகங்கள்

Photo

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே. 
அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.

English Meaning:
Only the Ignorant Dissuade the Practice

The water on the banks of body
Away, Away, from it – thus they say
The men who know not truth;
They who can drink the midstream
Rid of foam and wave
That arises first and last,
Will immortal be;
And all greying and wrinkling disappears.
Effect of Mixing Ingredients

Oh! damsel of flowing tresses and slender forehead!
Hear you a miracle this!
In this Water hidden in the body
Mix pepper, amla, turmeric, and neem
Soft will your body be;
And dark thine hair on head.
Tamil Meaning:
உண்ணத் தகுவதனையும், தகாததனையும் அறிய மாட்டாத சிலர், தம்வழி நிற்பாரை, கடற்கரையின் அருகில் கானலிலே உள்ள உப்பங்கழியின் நீரை அப்படியே முகந்து உண்ணுமாறு பணிப்பர். அந்நீரை நுரையையும், பிற மாசுகளையும் நீக்கி உண்ண வல்லவர்க்கே பயன் உளதாம்.
Special Remark:
இது ஒட்டணி. இதனுள் ``உவரி`` என்பது அடை பொதுவாக்கி மொழிதலும், ஈற்றடி அடை விரவத்தொடுத்தலும் ஆம்.(தண்டியலங்காரம், 51) இதனாற் பெறப்படும் பொருள் வருமாறு:- சுவாதிட்டானத்திற்கு அருகில் நின்று குறிவழியே வெளிப்போதுகின்ற சிறு நீரையே சிலர் `அமுரி` எனச் சொல்லிப் பிறரை உண்பிக்கின்றனர்; அஃது அறியாமைப்பாலது. அச் சிறுநீரைக் குற்றம் களையும் முறையறிந்து களைந்து உண்ண வல்லவர்க்கே அமுரியால் விளையும் பயன் உளதாகும்.
கானல் - கடற்கரையை அடுத்த இடம். `கானல்` எனவே, கரை, கடற்கரையாயிற்று. `உவரி` என்பது காரணக் குறியாய் உப்பங்கழி நீரைக் குறித்துச் சிறுநீர் மேலும் நோக்குடைத்தாயிற்று. வரைதல் - கொள்ளுதல். ``வரை வரை`` என ஏவல் முற்று, வலியுறுத்தற்கண் அடுக்கி வந்தது. இது பன்மை ஒருமை மயக்கம். முதற்கண் நின்ற திரை, அலை. அஃது ஆகுபெயராய் அதன்மேல் மிதக்கும் மாசுகளைக் குறித்தது. ``நரை திரை மாறும்`` என்றது, `மூப்பு நீங்கி இளமை உண்டாகும்` எனவும், ``நமனும் அங்கு இல்லை`` என்றது கூற்றுவன் வருதலும் அவரிடம் இல்லை எனவும் கூறியவாறு. ``நமன்`` என்பது அவனது வருகைமேல் நின்ற ஆகுபெயர். வரைதலைத் தள்ளுதலாக்கி, அதற்கியைய உரைப்பாரும் உளர்.
இதனால், `அமுரி` என்பதனை உள்ளவாறு உணராத வழிப் பயன் இன்மை கூறப்பட்டது.
இதன்பின், பதிப்புக்களில் காணப்படும் ``அளக நன்னு தலாய்`` என்னும் செய்யுள் நாயனார் திருமொழி அன்று என்பது, யாப்பமைதியானே எளிதின் விளங்கும். அன்றியும், மகடூஉ முன்னிலையாக நாயனார் மந்திரம் செய்யாமையும் நோக்கற்பாற்று. யாப்பமைதியைச் சீர்செய்தற்கு நிகழ்ந்த சிறு முயற்சி, ``அழகிய நன்னுத லாயோ ரதிசயம்`` எனவும், ``இளகிடும் மேனி`` எனவும் காணப்படுகின்ற பாட வேற்றுமைகளால் அறியப்படுகின்றது.