ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை

பதிகங்கள்

Photo

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே. 

English Meaning:
Consume 100 – Pepper Measure (drops) a Day

Drink of this divine water,
A hundred pepper measure
No medicine beyond this, know men;
Rub it clear on the crest of head
Your greying vanishes away
And fresh black hair shoots forth.
Tamil Meaning:
யோகியர்களே, நீவிர் பொடி செய்த மிளகை உண்ணுங்கள்; அதனால், சிறுநீர் சிவநீராய் மாறும். அவ்வாறு மாறுவதற்கு மருந்து ஒன்றும் வேண்டுவதில்லை. மிளகுப் பொடியின் ஆற்றலைத் தெளிந்து அறிவிற்கு நிலைக்களமான உச்சியில் அதனை அப்பினாலும் அவ்வாறாம். இன்னும் இதனாலே நரையும் மாறும்.
Special Remark:
நூறுதல் - பொடித்தல். ``நூறு மிளகு`` எனக் கொண்டு, எண் வரையறையாக உரைத்தல் கூடாமை அறிக. நுகரும், பன்மை ஏவல். ``மாந்தர்கள்`` என்பது பாடமாக ஓதின், இதனை, ``நுகர`` எனச் செயவென் எச்சமாக ஓதுக. ``நீர் சிவத்தின் மாறும்`` என மாற்றி யுரைக்க. சிவத்தின் - சிவமாக. ``மருந்தில்லை`` என்றதனால் இங்குக் கூறப்பட்டவை யோகியர்தம் ஒழுக்கப் பகுதியாய், அமுரி தாரணை யாய யோகத்திற்குத் துணையாவனவாயின. கப்புதல் - மூடுதல் `கப்பஇடின்` என்பதில் அகரமும், ``கப்பிடினும்`` என்னும் எச்ச உம்மையும் தொகுத்தல் பெற்றன. `உச்சிக்கு அப்பிடின்` எனப் பாடம் ஓதி, `உச்சிக்கு என்பது உருபு மயக்கம்` என்றலும் ஆம். ``இதற்கு`` என்பது உருபு மயக்கம்.
இதனால், அமுரி தாரணைக்குத் துணையாவன சில கூறப்பட்டன.