ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை

பதிகங்கள்

Photo

ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே. 

English Meaning:
Experiences of Yogi When Prana Ascends

When Prana and Sakti their departure take
One from the other
The yogi knows it this way;
Seven sounds he hears
Five colors he sees
Three odors he smells,
Two tastes he knows
Thus has the Lord of Light
The symptoms indicated.
Tamil Meaning:
மேற்கூறியவாறு சத்தி சிவங்கள் தம்மிற் பிரிந்து நீங்குகின்ற நாளின் எல்லையை, `சத்தம், உருவம் கந்தம், சுவை, பரிசம்` என்னும் புலன்களில் முறையே, `ஏழு, ஐந்து, மூன்று, இரண்டு, ஒன்று` என இவ்வாறாகப் பொது வகையில், இருளை அறுக்கும் ஒளியாகிய இறைவன் வகுத்து வைத்துள்ளான்.
Special Remark:
எனவே, ``இறப்பு நேருங் காலத்து இப் புலன் உணர்வுகள் இங்குக் கூறிய கால முறையில் கெடுவனவாம்` என்பது இத் திருமந்திரத்தின்வழி அறியப்படுகின்றது. இவ்வாற்றால், ``முதலில் பரிச உணர்வும், முடிவில் ஓசை உணர்வும், அவற்றிற்கு இடையே இங்குக் கூறிய முறையில் ஏனைய புலனுணர்வுகளும் கெடும்`` என்பது பெற்றாம். புலன்களை மேல்நின்றிழியும் கால முறையில் கூறினார். அதனால், பரிச உணர்வு ஒரு நாளிற் கெடும் முறையில் கூறினார். அதனால், பரிச உணர்வு ஒரு நாளிற் கெடும் என்பது தானே விளங்குதலின், செய்யுள் நோக்கி அதனை உபலக்கணத்தால் கொள்ள வைத்தார். `விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண், மூக்கு`` (சிவஞான போதம், சூ.5) எனப் பிறவிடத்தும் இவ்வாறு எஞ்ச வைத்தல் காண்க. புலன்களின் கேடு கூறவே, அவற்றிற்கு முதலாய பூதங்களும் இவ்வாற்றால் சத்தி கெடப் பௌதிகமாகிய உடம்பு அழியும் வகை பெறப்படுவதாம். செய்யுள் நோக்கிப் பொறியும், புலனும் விரவ ஓதினார். தேசி - ஒளியாயுள்ளவள். தேசன், அவ்வொளியை உடையவன். இவ்விருவரையும் மேல், (பா.705) ``நாதனும், நாயகி`` என்றதற்கு உரைத்தவாறே அவர் உரைப்பர். இத்திருமந்திரத்திற்குப் பிறர் பிறவாறு உரைத்த உரை பொருந்துவதாகாமையை அறிந்து கொள்க.
இதனால், யோகத்தால் வாழ்நாள் நீட்டிக்குமாறு கூறிய இயைபு பற்றி, யோகம் இல்லாதார்க்கு உள்ள வாழ்நாள் எல்லை கூறப் பட்டது.