ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை

பதிகங்கள்

Photo

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே. 

English Meaning:
Immortality Through Samadhi Yoga

The breath that arose twelve matras long,
If you control and absorb within,
Well may you live thousands upon thousands of years on land and sea
The body perishes not;
True this is,
Upon Lord Nandi I declare.
Tamil Meaning:
பிராணாயாம வன்மையால் தலையில் உள்ள அமுதத்தைப் பெற்று மிகவும் நுகர வல்லீராயின், உமக்கு உடம்பாய் அமைந்த, நிலம், நீர் முதலிய தத்துவங்கள் பலவும் அவை யவை ஒடுங்கும் முறையில், வலிமை கெட்டு ஒடுங்குதற்குத் தனித்தனிப் பல்லாண்டுக் காலம் செல்லும்; அங்ஙனம் செல்லவே, உடம்பு கெட் டொழியாது, நெடுநாள் நிலைத்து நிற்கும்; இஃது எங்கள் அருளாசிரி யரான நந்தி தேவர்மேல் ஆணையாக நான் சொல்லும் உண்மை.
Special Remark:
பிராணாயாமத்தின் அருமை உணர்த்தற்குப் பிராண வாயுவை நான்கு காலன்றிப் பன்னிரண்டுகால்கொண்டு அதிவேக மாய் ஓடும் குதிரையாக உருவகம் செய்து கூறினார். `பன்னிரண்டு கால்` என்றது. அது புறப்படும் அங்குல அளவை. முன் நிற்கற் பாலதாய நிலம், செய்யுள் நோக்கிப் பின் நின்றது. மூன்றாம் அடியின் இறுதியில் எஞ்சி நின்ற, `என இவ்வாறாக` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. மூன்றாம் அடிக்குப் பிறவாறு உரைப்பாரும் உளர்
இதனால், மேல் வலியுறுத்தப்பட்ட பிராணாயாமம் வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாதல் இவ்வாற்றான் என்பது கூறி. அடுத்து வருகின்ற காய சித்திக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.