ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்

பதிகங்கள்

Photo

ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. 

English Meaning:
Sit cross-legged with soles of feet upturned
Close draw the feet on thighs opposite,
Stretch then the hands afore on feet
That Padmasana is, famed for on earth.
Tamil Meaning:
பாதங்கள் துடைகளின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு ஏற்றி, பின் நன்றாக வலித்து இழுத்து அவை துடைகளின் புறம் நிற்குமாறு செய்து, அப்பாதங்களின்மேலே இரு கைகளையும் மலர வைப்பின், அந்நிலை தாமரை மலர் வடிவிற்றாய், ``பதுமாதனம்`` என்று சொல்லுதலைப் பெறும்.
Special Remark:
ஆதனங்களில் விலக்குண்ணாத இடங்களில், ``உடலை நேரே நிமிர நிறுத்தி, இருகண்களாலும் மூக்கு நுனியை நோக்கி நிற்றல்`` என்பது பொதுவாகச் சொல்லுதலை உடைத்து. இதனுள், உடலை நேராக நிறுத்துதலைப் பத்திராதனத்திலும், மூக்குநுனியை நோக்குதலைச் சிங்காதனத்திலும் எடுத்தோதுவார். ஓர் அணைய - ஒன்றாகச் சேர. ஊரு - துடை. ``அழகுற`` என்றது, ``மலர`` என்றவாறு. ``தன்`` என்றது, பாதத்தை. ``அதனை, தன்`` என்பன பன்மை ஒருமை மயக்கம்.
இதனால், உத்தமாதனங்கள் எட்டனுள் பதுமாதனத்தின் இயல்பு கூறப்பட்டது.