ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்

பதிகங்கள்

Photo

அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே. 

English Meaning:
Waver not, this way and that
Follow the way of eight-limbed Yoga
And reach Samadhi State;
They who tread that blessed path
Shall reach Jnana`s peak;
No more are they in this vile flesh born.
Tamil Meaning:
`நாம் கொண்ட நெறி நன்றோ, இது வல்லாத பிறிதொரு நெறி நன்றோ` என்று ஐயுற்று அலமராது, எந்நெறிக்கும் வேண்டப்படுவதாகிய அட்டாங்கத்தை உடைய யோக நெறியிலே சென்று, உம்மால் விரும்பப்படுகின்ற பொருளிலே உள்ளம் ஒடுங்குங்கள். இவ்வாறு ஒடுங்கும் நன்னெறியில் நிற்பவர்க்கு ஞானத்தை எளிதில் தலைப்படுதல் கூடும். பின்பு அந்த ஞானத்தின் பயனாகப் பிறவியாகிய இழி நெறியிற் செல்லுதல் இல்லையாம்.
Special Remark:
யோகம் மெய்ந்நெறியாளர் பலர்க்கும் வேண்டப் படுவது ஆதலின், அவர் அனைவர்க்கும் பொதுவாயிற்று. புறத்துச் சென்று அலமந்த மனம் அவ்வலமரல் நீங்கி ஒருக்கம் உற்றபின், பொரு ளியல்புகள் எளிதில் உள்ளவாறு விளங்குமாகலின், ``இந்நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகல் ஆம்`` என்றார். ``ஆம்`` என்றது எளிதிற் கூடும் என்றவாறு. `பிற நெறிகளால் பொருளியல்பு உள்ள வாறு விளங்குதல் அரிது` என்பதை விளக்கவே, `இந்நெறி அந்நெறி என்னாது` என முதற்கண் கூறினார். `போலும்` என்பது ``போன்ம்`` என நிற்றல்போல், ``நில்லும்`` என்பது உம்மையுள் உகரங்கெட, ``நின்ம்`` என நின்றது. `நின்மின்` என்பது பாடமாயின், ``இந்நன்னெறி`` எனச் சுட்டு வருவிக்க. ஆகம் - உடம்பு.
இதனால், ஞானத்திற்குச் சிறந்த வழி யோகமாதல் கூறப் பட்டது.