ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்

பதிகங்கள்

Photo

கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

English Meaning:
As they move away,
A single stone from temple wall
That shall spell the Crowned King`s ruin;
Be he a sage; be he one learned in Vedas,
Sure the crisis; certain the ruin;
—So Ordained the Lord.
Tamil Meaning:
திருக்கோயிலில் மதிலைக்கட்டுவித்தவரே பின்பு பொருளாசை முதலிய காரணங்களால் அதினின்றும் ஒரு கல்லை எடுப்பினும், சாதாக்கிய தத்துவத்தில் இருந்துகொண்டு ஆகமங்களை அருளிச்செய்த சதாசிவ மூர்த்தியின் ஆணை அவரை அழிக்கும். அக் குற்றம் நிகழாவாறு காவாமைபற்றி, அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசரையும் அவ்வாணை இடருறச் செய்யும். அக் குற்றத்தைச் செய்தவர், `முனிவர்` என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற அந்தணராயினும், அவ்வாணை அவரைக் கொலையுண்டு மடியவே செய்யும்.
Special Remark:
`கட்டுவித்தவர்க்கே இவ்வாறாம் எனின், பிறர் அது செய்யக் கருதுவராயின் என்னாவார்` என்பது சொல்ல வேண்டா வாயிற்று. இதனானே, கோயில் மதில் முதலியவற்றிற்கே யன்றி அதன் உள்ளிடம், திருக்குளம், நந்தவனம் முதலியவற்றிற்கும் பழுதுண்டாக்க லாகாமை அறிந்துகொள்க. ``வாங்கிய`` என்பதன்பின், `அவரை` என்பது வருவிக்க.
இதனால், திருக்கோயில் முதலிய இறைவன் இடத்திற்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.