
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
பதிகங்கள்

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே.
English Meaning:
You may give away wealthAs massive as a mountain;
Yet if you give it
To those that adore not our Lord;
You shall with them reach
The Seventh Hell of ineffable pain.
Tamil Meaning:
`தலைவனே, சிவபெருமானே` என்று அவனது நாமத்தைச் சொல்லிக் கைகூப்பி அவனை நினைத்து வணங்கித் தானம் வாங்க அறியாதவர்க்கு, நிலத்தளவும், மலையளவுமான பெரும் பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் அப்பொருளால் பயன் பெறாது, ஈந்தோனும் ஈயப்பட்டோனும் (ஏற்போனும்) ஆகிய இருவரும் மீளாத நரகக் குழியிலே வீழ்வர்.Special Remark:
``அத்தனை`` என்றதனை, `மண்` என்றதற்கும் கொள்க. `இறைஞ்சாதார்க்கு ஈயினும்` என மேலே கூட்டுக. தானம் வாங்கு வோர் அதனைத் தமக்கு உரியதாக நினையாது சிவனுடையதாக நினைந்து, `சிவனுக்கு ஆகுக` (சிவார்ப்பணமஸ்து) எனக் கூறியே ஏற்றல் வேண்டும். அவ்வாறு ஏலாதார் சிவனது பொருளைக் கவர்ந்த சிவத் துரோகிகளாவர். அதனால், `அவரும், அவருக்குக் கொடுத் தோரும் நரகுறுவர்` என்றார். தானம் வாங்காது தம் பொருளை நுகர்வோரும் அங்ஙனமே நினைத்தல் வேண்டுமாயினும், அவர், `அங்ஙனம் நினைக்கும் உயர்ந்தோர்` எனத் தம்மைக் கூறிக் கொள்ளாமையின் அவர்க்கும், அவரொடு பழகுவோர்க்கும் பெருங் குற்றம் இல்லை`. தானம் வாங்குவோர் அத்தன்மையுடைய உயர்ந் தோராகத் தம்மைக் கூறிக்கொண்டு, தானம் செய்வாரை வஞ்சித்தலின் குற்றமுடையராகின்றனர். இதனை உட்கொண்டே திருவள்ளுவரும்,நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
- குறள் - 276
என்றார். இனிக் கொடுப்பாரும் அவ்வாறே சிவனை நினைந்து, ஏற்போரைச் சிவனாகவும், பொருளைச் சிவனுடையதாகவும் கருதி `சிவனுக்கு ஆகுக` என்று சொல்லிலே கொடுத்தல் வேண்டுமாதலின் ``இருவரும்`` என்றார். ``ஈந்த`` என்னும் பெயரெச்சம் வினைமுதற் பொருண்மையும், கோடற் பொருண்மையுமாக இருநிலைமை எய்திநின்றது.
இதனால், மேல், ``பெரும்பிழை`` எனப்பட்ட, அசற் பாத்திரத்தில் இடும் குற்றத்தால் விளையும் துன்பம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage