ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்

பதிகங்கள்

Photo

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.

English Meaning:
I gave Him not up even while in womb;
I forgot not the truth of His holy Feet;
I gave up falsehood and sought them;
They Feet of Lord of matted locks
Are a Lamp no oil feeds.
Tamil Meaning:
நான் சிவபெருமானது திருவடியைக் கருவில் இருந்தபொழுதும் மறந்திலேன், பிறந்து வாழ்கின்ற இப்பொழுதும் அதனை மெய்யன்போடே நான் தேடுகின்றேன். அதனால், அத் திருவடி எனக்கு நெய்விட்டு ஏற்றாது இயல்பாகவே ஒளிவிடும் விளக்காகும்.
Special Remark:
`அவ்விளக்கினை அடைந்தோரே சற்பாத்திரர்` என்பது குறிப்பெச்சம். மெய் - உடம்பு. `விட்டிலேன்` என்றது, அதனொடு கூடி வாழ்தலைக் குறித்தது. இடிஞ்சில் - அகல். அஃது ஆகுபெயராய் விளக்கை உணர்த்திற்று. `இடிஞ்சிலும் ஆம்` என்ற உம்மை, `காணப்படு பொருளும் ஆம்` என ஆக்க உம்மை. ``அவனருளாலே அவன் தாள் வணங்கி`` (தி.8 சிவபுராணம், 18) என அருளிச் செய்தமை காண்க. ஈற்றடியை, `நெய் விட்டிலாத` என ஓதி, ``ஆமே`` என்பதற்கு, `பயன்தருமோ` என உரைத்து, சிவஞானம் இல்லாதவரால் பயன் இன்றாதலை ஒட்டணி வகையால் பெறுவாரும், `புரிசடையான் அடியாகிய நெய்` என உருவகமாக்கி அப்பொருள் பெறுவாரும் ஆவர். அவருள் முன்னையோர்க்கு `அடி` என்பதனை இருகாற் கூறவேண்டாமையும், பின்னை யோர்க்கு இடிஞ்சிலாதற்கு ஏற்புடைய பொருள் கூறப்படாமையும் உணர்க.