ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்

பதிகங்கள்

Photo

கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

English Meaning:
Death waits for the moment due
And seizes lives;
But the Lord seizes Death`s life;
Such indeed, His Prowess is;
He blesses all who know Him true;
They who sought Him, immortals became.
Tamil Meaning:
உலகத்தில் உணர்வுடையார் சிலரே உயிர்கள் அனைத்தையும் ஒவ்வொரு கால எல்லையில் கூற்றுவன் கொண்டு போதலை மனத்துட் கொண்டார்கள். பின்னும் தன்னை உட்கொண் டவரது உயிரைத் தான் தன்னுட்கொள்ளும் குணம் உடையவனும், நன்னெறியாகிய ஞானநெறியில் சென்றவர்மாட்டு அருள்மீக் கூர்கின்றவனும் ஆகிய சிவபெருமானை அந்நன்னெறியிலே சென்று உணர்ந்தார்கள். அவர் மேன்மக்களாதலன்றியும், `தேவர்` எனவும் போற்றப்படுதற்கு உரியராவர்.
Special Remark:
`அதனால், அவரே சற்பாத்திரர்` என்பது குறிப் பெச்சம். ``உயிர்கொள்ளும் குணத்தான்`` என்றதனை, தி.8 `உயிருண்ணிப் பத்து` என்பதனோடு வைத்து நோக்குக. `ஆம்` என்பதனை நாயனார் படர்க்கை ஐம்பாற்கும் உரித்தாகவே ஓதுவர்.
இதனால், சிவஞானிகள் சிலரேயாதல் கூறப்பட்டது.