ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்

பதிகங்கள்

Photo

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

English Meaning:
Brahma that is seated, on the lotus comely
Sauntered in the Lord`s path in manner unreasonable
The sinful wretch!
The Lord sought Him
And in his severed head gathered alms
In ways the gods approved.
Tamil Meaning:
சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையைப் பலவாற்றானும் விளக்கியருளியபொழுது, வேதங்கள் அவனை நல்ல இசைகளால் துதித்தன. அப்பால் அப்பெருமான் தாழ் வின்றிச் சிறந்து நிற்கின்ற இடமாகிய தாமரைப் பொகுட்டில் வீற்றிருக் கின்ற பிரமன் முன்னே செல்ல, அவன், `மகனே` என விளித்து இகழ்ந்ததனால் உண்டாகிய குற்றத்தை உடையவனாயினமை பற்றி அவன் மேற் சென்று கிள்ளிக்கொண்ட அவனது ஐந்து தலைகளில் தன்னை இகழ்ந்த நடுத்தலையில் ஏனைத் தேவரும் அவனைப் போலத் தன்னைப் பழித்துக் குற்றத்திற்கு ஆளாகாதவாறு அவரிடத்தெல்லாம் உஞ்ச விருத்தியை (பிச்சை ஏற்றலை) மேற்கொண்டான்.
Special Remark:
``பண் பழி`` என்றதற்கு, `பண்ணாற் பழிச்சுதல்` என உரைக்க. `இப் பழிச்சுதலாகிய வழிபாட்டினைச் செய்தவை வேதங்கள்` என்பது ஆற்றலால் கொள்ளப்பட்டது. இவ்வாறன்றி, ``பண்`` என்றதனை ஆகுபெயராக்கி, `வேதம்` என்று உரைப்பினும் ஆம். முதற்கண் `சென்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். கண் - இடம். சென்ற - கழிந்த. பழியாத - இகழப்படாத; என்றது, `புகழத் தக்க` என்றவாறு. இத்தகைய சிறந்த இடத்தில் இருப்பவன் அதற்கேற்ற அறிவுபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பு. நண்பழி, வினைத் தொகை. ஆளன் - அதனை உடையவன். ``சென்று`` என்றது, சென்று கொய்த தன் காரியம் தோன்ற நின்றது. `சிரத்தின்கண்` என உருபு விரிக்க. பழியாத விருத்தி - இகழாமைக்குக் காரணமான தொழில்.
இதனால், மேல், ``அயன்தலை முன் அற`` (தி.10 பா.337) என ஓதப்பட்ட வரலாறும் இப்பொழுதே நிகழ்ந்தது என்பது கூறப்பட்டது.