ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்

பதிகங்கள்

Photo

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. 

English Meaning:
As the Ocean`s swell subsided;
The ocean of immortals and Devas sang;
``Praised be our Lord;``
Little do they know
That He who created the ocean and the firmament
Rises beyond to the Ocean of His benignant grace.
Tamil Meaning:
தண்ணிய கடல் பொங்கி வந்து மலைகளை மூடிய நிலையின் நீங்கி அடங்கிற்று; எனவே, பிரளய வெள்ளம் வற்றிற்று. அதுபொழுது தேவர்கள், `ஏழ்கடலோடு பெரும்புறக் கடலும் தன்னைச் சூழ்ந்து நிற்கத் தான் ஓங்கிய அழலாய் நின்றவன் எங்கள் சிவபெருமானே` என அவனைப் பலவாற்றால் துதித்து வணங்கினர். அதன்பின்பு அவர்கள் விண்ணுலகத்தைக் கடல்போலப் பரக்க அமைத்துக்கொண்டு, அங்குச் சென்று குடிபுகுந்தனர். அதன்பின்பு அவர்கள் தங்கள் சுவர்க்க இன்பத்தில் திளைக்கின்றனரேயன்றிச் சிவபெருமானை நினைந்து காதலாகிக் கசிந்து, கண்ணீரால் கடலை உண்டாக்கும் எண்ணமே இலராயினர்.
Special Remark:
`இறைஞ்சுவர்` என்பது பாடம் அன்று.
இதனால், ஊழிதோறும் உயிர்கள் சிவபெருமானது முதன்மையை மறந்து வினையிற் சுழலுதல் கூறப்பட்டது.