ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்

பதிகங்கள்

Photo

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்
டுலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

English Meaning:
And high amidst the surging flood
The Lord as Flaming Mountain stood
His primacy for the Gods to know
The mortal ones
Powerless to stand the Fire-Mountain`s radiant glow
Rushed to the surging waters in trembling fear;
The Lord then said to them: ``Fear not! you shall be saved.
Tamil Meaning:
சிவபெருமான் பிரளய வெள்ளத்தில் மேற்கூறிய வாறு அனற்பிழம்பாய்த் தோன்றியபொழுது அலைகின்ற கடலை ஊடறுத்துக் கீழ்ப்போகியும், வானத்தை ஊடறுத்து மேற்போகியும் அடி தலை தெரியாவகை நின்று, `தேவர்க்கும் முதல்வன்` என்னும் சிறப் பினைத் தான் உடையவனாய் இருத்தலின், உலகம் தான் கொண்ட தழல் வடிவைக் கண்டு வெருண்டு அதனுள் வீழ்ந்து ஒடுங்காதவாறும், அதனினின்றும் சேய்மையில் ஓடிப் பிரளய வெள்ளத்தில் வீழ்ந்து அழியாதவாறும் அவற்றிற்கு, ``அஞ்சல்`` என்று அபயந்தந்து காத்தருளினான்.
Special Remark:
எனவே, `தெறலும், அளியும் அவ்வவர்க்கு ஏற்ற வாற்றாற் செய்யும் அவனது தலைமைப் பாடு இனிது விளங்கும்` என்றவாறு.
`கொள்ளுதலால்` என்பது `கொண்டு` எனத் திரிந்து நின்றது. தான் தலைவன் எனப்படுதலால் அவனுக்கு உளதாவது ஒரு பயன் இல்லை. அனைத்தையும் உய்விக்கும் சுமையே உளதாவது என்றற்கு, ``தலைவன் எனும் பெயர், தான் தலை மேற்கொண்டு`` என்றார். இதற்குக் காரணம் கைம்மாறு கருதாத கருணையே என்பதாம். ``எடுத்துச் சுமப்பான்`` என்றார் திருவருட்பயனில் (பா.65).
இதனால், சிவபெருமான் தெறலும் அளியும் அக்காலத்துச் செய்து நின்றமை கூறப்பட்டது.