ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி

பதிகங்கள்

Photo

மனமாயை மாயைஇம் மாயை மயக்க
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந் திருப்பது தத்துவந் தானே.

English Meaning:
Maya Creates No Illusions There

Maya is but mind`s work,
It creates the illusions;
When the mind`s illusion disappears,
Nothing there left to worry about;
Death will not there be;
Chatter no more;
To seek the Self is Truth Divine.
Tamil Meaning:
மாயையின் உண்மை யாதாயினும் பொதுவாக `மாயை, மாயை` எனச் சொல்லிப் பலரும் முறை செய்வன எல்லாம் மாயா காரியங்களுள் ஒன்றாகிய மனத்தைக் குறித்தேயாம். (``மனம் எனவும் ஒரு மாயை எங்கேயிருந்து வரும்`` என்றார் தாயுமான வரும்.) இந்த மனமாகிய மாயை, `பிறரை மயக்குவது` என்பது இல்லாமல் அது மயங்கும்படி செய்க. அஃதாவது, `அதன் கொட்டம் அடங்கும்படி செய்க` என்பதாம். மனம் அடங்கிவிட்டால், ஆன்மாவை அலைப்பது வேறு எதுவும் இல்லை. ஆகவே, அப்பால் அடங்க வேண்டுவதாகவும் எதுவும் இல்லை. மனத்தின் வழிப்பட்டு உள்ளத்தில் தோன்றியவற்றைத் தோன்றியவாறே பலபடப் பேசும் பேச்சுக்களும் அற்றொழியும். அப்பால் புறப்பொருள்களைத் துருவித் துருவி ஆராய்வதை விடுத்து, ``நான் ஆர், என் உள்ளம் ஆர், ஞானங்கள் ஆர்``3 என்பன போல உள்நோக்கி ஆன்மாத் தன்னையும், தலைவனையும் ஆராய்ந்து உணர்வதே மெய்ப் பொருளைக் கூட்டுவிக்கும் மெய்யுணர்வாகும்.
Special Remark:
மனமாயை, `மனமாகிய மாயை` என இருபெயர் ஒட்டு. இதில் ``மாயை`` என்பது அதன் காரியத்தைக் குறித்தது. `இம்மாயையை` என இரண்டாவது விரிக்க. `மயக்க` என்பது அகர ஈற்று வியங்கோள். பின்வந்த ``மன மாயை``, `இது` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. தான், அசை. ``வேண்டா`` என்பது. வேண்டப் படாதாய் அற்றொழிதலைக் குறித்தது. `தன்னை` என்பது இடைக் குறைந்து, `தனை` என நின்றது. தன்னை ஆய்தல் கூறவே, அதனோடு உடன் நிகழ்வதாகிய தலைவனை ஆய்தலும் கொள்ளப்பட்டது. பிறவற்றை ஆராயாது, தன்னையும், தலைவனையும் ஆராய்தலை மட்டுமே கூறினமையாயினும், இந்த ஆராய்ச்சி அருள்வழி நிகழ்வதே யாகலானும் `திருவைந்தெழுத்தில் பாச எழுத்துக்கள் இரண்டை நீக்கி ஏனை மூன்றெழுத்தையே கொண்டு உணர்க` என மறைபொருளாக உணர்த்தியதாயிற்று. `முத்தி பஞ்சாக்கரமாவது இதுவே` என்பது, மேல்` ஐந்தெழுத்து` அதிகாரத்தில் சொல்லப்பட்டது. `இதனைக் கணித்தல்` என்பதும் சுத்தமானதாக அறிவாற் கணித்தலேயாதல், முன் மந்திரத்தில் ``திரையற்ற நீர்போல்`` என உவமையாற் கூறப்பட்டது. இங்கு ``மன மாயைதான் மாய`` என்றதனால் நேரே கூறப்பட்டது.
இதனால், `பஞ்சாக்கரத்தை முத்தி பஞ்சாக்கரமாகக் கொண்டு, அதனையும் `வாசகம், உபாஞ்சு, மானதம்` முறைகளுக்கு அப்பாற்பட்ட சுத்த மானத முறையிலே கணிப்பின் முத்திப் பயன் உளதாகும்` என அதன் மாட்சிமை உணர்த்தப்பட்டது.