ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி

பதிகங்கள்

Photo

தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான்அவன் ஆனபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

English Meaning:
State of Oneness in God

When you have, yourself, limitless become,
Who, in limit, are you to see?
When you have, yourself, He become,
Who are you to think of?
The Eyes that vanquished the God of Love,
Whom are they in longing to look for?
—Tell me, yourself, the real Truth?
Tamil Meaning:
தூய்மையாகிய சுத்தாவத்தையைப் பயக்கும் முத்தி பஞ்சாக்கரக் கணிப்பினால் ஓர் ஆன்மா தனது ஏகதேச உணர்வாகிய சுட்டுணர்வு கழியப்பெற்ற பின் அஃது யாரை வரைந்து சுட்டியுணரப் போகின்றது? இனி அது தான் சிவமாகி விட்டபின்பு யாரைத் தியானப் பொருளாக வரைந்து கொண்டு தியானிக்கும்? அவாவின் வேரையே அஃது அறுத்து விட்டபின்பு அஃது யாரை விரும்பும்? மாணவர்களே, நீங்களே சொல்லுங்கள்.
Special Remark:
`இவற்றிற்கெல்லாம் சிறிதும் இடம் இல்லை` என்பது கருத்து. வினாக்கள் யாவும் இன்மையைக் குறிப்பால் உணர்த்தி நின்றன. `உலகத்தை உணர்வது சுட்டுணர்வினாலும், விருப்பு, வெறுப்புக்கள் தோன்றுதல் அச்சுடணர் வினை பயனாலும் ஆகலின் சுட்டுணர்வு நீங்கவே அவையெல்லாம் இயைபின்றி நீங்கும்` என்பதும் கருத்து. காமன் - மன்மதன். அவன் அவாவின் வேருக்கு ஓர் உருவகம். `அவன் சிவனது நெற்றிக்கண் முன் நில்லான் ஆகலின், சிவ ஞானியர் கண்முன்னும் நில்லான்` என்னும் நயம் தோன்றச் சிவ ஞானியரது அறிவை, காமனை வென்ற கண்` என்றார். `சுட்டுணர்வு நீங்கவே, சிவத்தையும் ஆன்மாத் தன்னின் வேறாக வைத்துச் சுட்டியுணர்தல் இன்றித் தன்னுள்ளே அறிவுக்கறிவாக அநந்நியமாய் நின்று உணரும்` என்பது, ``ஆரை`` நினைவது என்பதனால் குறிக்கப் பட்டது. ஆன்மாச் செயற்கையாய் எய்திய சுட்டுணர்வு நீங்குதல் பாச நீக்கத்தாலும், இயற்கையாகிய வியாபக உணர்வைப் பெறுதல் சிவத்தைத் தலைப்படுதலாலும் ஆதல் பற்றி, வியாபக உணர்வு எய்தினமையை, ``தான் அவன் ஆதல்`` என்றார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், முத்தி பஞ்சாக்கரமாகிய வரையுரை சீவனைச் சிவமாக்கியருளும் மாட்சிமை கூறப்பட்டது.