ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்

பதிகங்கள்

Photo

பரனாய்ப் பராபர னாகிஅப் பாற்சென்(று)
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தர்
தரனாய்த் தனாதென ஆறறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.

English Meaning:
The Unknowable Bestows Grace as Hara

As Paran, as Paraparan and Beyond
As constant interminable Light Transcendental;
As Support definite of all,
As One beyond knowledge of Self,
As Hara here below,
He, His Grace showers.
Tamil Meaning:
(இங்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்ற சிவன்) உலகங்கள் பலவற்றிலும் மேல் உள்ள உலகில் உள்ளான். இனிமேல் உள்ள பொருளுக்கும் மேலாய் அவற்றைக் கடந்தும் இருக் கின்றான். ஆயினும் தனக்குக் கீழே உள்ள எல்லா உலகங்களிலும் நிறைந்து நின்று உயிர்களின் பிறவித் தொடர்ச்சி அறுபட அருள் புரிகின்றான். அஃது எங்ஙனம் எனின், பிறிதொரு பொருளால் வெல்லப்படாத ஆற்றலையும், பிறர் அறிவிக்க வேண்டாது தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறியும் அறிவினையும் உடையனாயும், அனைத்துப் பொருளையும் ஆதாரமாய் நின்று தாங்குபவனாயும், பாசங்களை அறித்தல் தெரியாமலே அரிப்பவனாயும் இருந்து.
Special Remark:
பரன் - மேலானவன். இங்கு இஃது இடம் பற்றி வந்தது. அவ்விடமாவது நாத தத்துவன். `பராற் பரன்` என்பது ``பராபரன்`` என மருவி வந்தது. `அப்பாற் சென்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. `சென்றும் உலகில் அருள் புரிந்தான்` என இயைத்து முடிக்க. `ஆகவே, அவனை வாக்கு மனங்களைக் கடந்தவன்` எண்ணிச் சோர்ந் தொழியாது, மேற்கூறியவாறு நோக்குமாற்றால் நோக்கிக் காணுதல் கூடும்` என்பதும், `ஞானிகள் அவனை அங்ஙனம் கண்டிருப்பர்` என்பதும் கருத்துக்களாம். உரம் - அறிவு. `வழக்கு` எனினும், `தொடர்ச்சி` எனினும் ஒக்கும். அது பிறவித் தொடர்ச்சியையே குறித்தது. ``சுடர்`` என்றது அறிவை. தான், அசை. தான் - தாங்குபவன். ஆறு - வழி. தனாதென ஆறு அறிவொண்ணா - தான் கையாளும் வழி இது என அறிய ஒண்ணாமல், `ஒண்ணாது` என்பது ஈறு குறைந்து நின்றது. அரன் - பாசத்தை அறிப்புன். ``உரனாய் ... ... ... அரனாய்`` என்றது, சிவன் உலகில் நிற்கும் நிலையில் கொண்டிருக்கும் இயல்புகளை விரித்தது. அதனால், அவை அவன் அருள் புரிதற்குக் காரணமாக, அதற்குப் பின் வைத்து உரைக்கப்பட்டது.
இதனால், சிவன் பொருள் நிலையில் வாக்கு மனங்களைக் கடந்தவனாயினும், அருள் நிலையில் உலகில் எங்கணும் நிறைந்து நிற்றலால் இங்குள்ளார் அவன் உண்மை உணர்தல் கூடும் என்பது கூறப்பட்டது.)